சென்னை மெரினாவில் போராட்டத்தை கைவிட போலீஸ் வேண்டுகோள்- மாணவர்கள் மறுப்பு
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை ஏற்க மாணவர்கள் மறுத்து விட்டனர்.
சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், ஜல்லிக்கட்டு நடத்த அரசு அவசர சட்டம் இயற்ற உள்ளதாக கூறினர். இதனை ஏற்க மறுத்த மாணவர்கள் வாடிவாசல் வழியாக காளைகள் வரும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
சென்னை மெரினாவில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் டெல்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நடத்த இன்னும் ஓரிரு நாட்களில் அவசர சட்டம் இயற்றப்படும் என்றார்.
இதைத்தொடர்ந்து அவசர சட்டம் அறிவிப்பு தொடர்பான அறிக்கையுடன் மைலாப்பூர் போலீஸ் துணை கமிஷ்னர் பாலகிருஷ்ணா மெரினா கடற்கரைக்கு வந்தார். போராட்டக்குழுவினர் மத்தியில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை குறித்து விளக்கினார்.
மேலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அவசர சட்டம் தொடர்பான அறிக்கையையும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மத்தியில் வாசித்தார். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பாலகிருஷ்ணா தெரிவித்தார்.
அரசின் நடவடிக்கைகள் மற்றும் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கமிஷ்னர் பாலகிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தார். கமிஷ்னர் பேசுவதை அமைதியாக கேட்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அவசர சட்டம் பிறப்பித்து வாடிவாசல் வழியாக காளைகள் வரும் வரை போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.