மாணவர் புரட்சியின்போது நடந்த வன்முறை சம்பவங்கள் வீடியோக்களை வெளியிட்டது சென்னை போலீஸ்
ஜல்லிக்கட்டுக்கான மாணவர் புரட்சியின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களை சென்னை போலீசார் இன்று வெளியிட்டனர்.
சென்னை: மெரினா மாணவர் புரட்சியின் போது நடந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களை சென்னை போலீசார் இன்று வெளியிட்டனர்.
ஜல்லிக்கட்டு உரிமை கோரி மெரினாவில் பல லட்சம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் முடிவில் போலீஸார் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி இருந்தன.
ஆனால் இதை போலீசார் மறுத்து வந்தனர். மாணவர்கள் போராட்டத்தில் சதிகார கும்பல், தேசவிரோதிகள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் போலீசார் பலரும் பாதிக்கப்பட்டனர்.
இதன்பின்னரே தாங்கள் நடவடிக்கை எடுத்ததாக போலீசார் கூறிவந்தனர். இந்த நிலையில் இன்று சென்னையில் போலீசார், மாணவர் போராட்டத்தின் போது நடந்த வீடியோ ஆதாரங்கள் பலவற்றை வெளியிட்டனர்.
இதை வெளியிட்ட சென்னை பெருநகர தெற்கு கூடுதல் ஆணையர் சங்கர், குடியரசு தினத்தை சீர்குலைக்கும் வகையில் தேசவிரோத சக்திகள் மாணவர் போராட்டத்தைக் கைப்பற்ற முயற்சித்ததாக குற்றம்சாட்டினார்.
மேலும் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்படுவது, மிளகாய் கரைசலை தயாரிப்பது, போலீசார் வாகனங்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோக்கள், புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.