வெடிகுண்டுகளை செயலிழக்க வைப்பது எப்படி... மாணவர்களுக்கு நிகழ்த்திக் காட்டிய சென்னை போலீஸ்!
சென்னை: உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்புத் தினத்தையொட்டி சென்னை போலீஸார் நேற்று அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு பல்வேறு சாகச நிகழ்ச்சிகளைச் செய்து காட்டினர். வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க வைப்பது, மோப்பநாய்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் செய்துகாட்டினர்.
உலக குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொ ட்டி சென்னை காவல்துறை சார்பில் போலீஸாரின் செயல்பாடுகள் குறித்து அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு விளக்கிக் காட்டுமாறு மாநகரஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கூடுதல் ஆணையர் நல்லசிவம், கூடுதல் துணை ஆணையர் சியாமளா தேவி ஆகியோரது மேற்பார்வையில் காவல்துறையின் சாகச நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடத்தப்பட்டது.
இதில் ஓட்டேரி அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 25 மாணவர்களும், புரசைவாக்கம் ஆண்கள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 25 பேரும் வந்திருந்தனர்.
இந்த செயல் விளக்கத்தின்போது, வெடிகுண்டுகளை செயலிழக்க வைப்பது எப்படி, ஏகே 47 துப்பாக்கியை பயந்படுத்துவது எப்படி, சாதாரண துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது எப்படி, கடத்தல்காரர்கள், தீவிரவாதிகளை போலீஸார் எப்படி பிடிக்கிறார்கள், கமாண்டோப் படையினரின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது குறித்தும் செயல் விளக்கம் இடம் பெற்றது. இதுபோக மாணவர்களை ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்து அங்கு காவல் கட்டுப்பாட்டு அறை எப்படி செயல்படுகிறது என்றும் போலீஸார் விளக்கிக் காட்டினர்.
இதுதவிர மோப்ப நாய்களின் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களுக்கு காட்டப்பட்டது. நாய்கள் எப்படி மோப்பம் பிடித்து திருடர்களைப் பிடிக்க உதவுகின்றன் என்றும் காட்டினர்.
வருகிற வெள்ளிக்கிழமை வரை தினசரி 50 அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு இதுபோல செயல் விளக்கம் காட்ட்பபடும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.