சென்னையில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த 38 செ.மீ மழை.. நல்லவேளையாக மற்றொரு வெள்ள சோகம் தவிர்ப்பு!
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 38 செ.மீ மழை பதிவானது. நல்ல வேளையாக வெள்ள சேதம் ஏற்படாமல் நகரம் தப்பியது.
சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சோழிங்கநல்லூர் பகுதியில் அதிகபட்சமாக 38 செ.மீ மழை பெய்துள்ளது.
வர்தா புயல் காரணமாக நேற்று காலை முதலே சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இதுகுறித்து கூறியுள்ளதாவது: கடந்த 24 மணிநேரத்தில் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் அதிகபட்சமாக 38 செ.மீ பெய்துள்ளது.
கேவிகே காட்டுகுப்பத்தில் 33 செமீ மழை பதிவானது. காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 28 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட உள்தமிழகத்தில் பரவலான மித மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்.
தருமபுரிக்கு 40 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால், தர்மபுரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு. பெங்களூரிலும் மழை பெய்யும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரே நாளில் தாம்பரம் பகுதியில் 50 செ.மீ மழை பதிவானது. அன்றுதான் சென்னை வெள்ளத்தில் மிதந்தது. இப்போது 38 செ.மீ வரை மழை பதிவான நிலையில், நல்லவேளையாக வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை தப்பியது.