இடிந்து விழுந்த சென்னை சில்க்ஸ் கட்டிட 2வது தளம்... அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை
சென்னை சில்க்ஸ் கட்டிடம் தொடர்ந்து 15 மணி நேரமாக எரிந்து வருவதால் வெப்பம் தாங்காமல் 15 அடி சுவர் இடிந்து விழுந்தது.
சென்னை : சென்னை தியாகராயநகரில் 15 மணி நேரத்திற்கு மேலாக எரிந்து வரும் சென்னை சில்க்ஸ் கட்டிட தீ விபத்தால் முன்பக்க சுவர் இடிந்து விழுந்துள்ளது.
சென்னை தியாராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதனை அதிகாலை முதல் தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டிடத்தின் உள்ளே சென்று தீயை அணைக்க முடியாத அளவு தீ தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. ஜவுளிக்கடை என்பதால் ஏராளமான துணிகள் 7 மாடி கட்டிடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவை ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்து வருவதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.
மின்சாரம் இல்லை
சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் தியாகராய நகர் மேம்பாலத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கவும் பட்டுள்ளதால் அந்தப் பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடம் பலம் இழப்பு
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் ஊடகத்துறையினரை அந்தப் பகுதிக்கு அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்து விட்டு எரியும் தீயால் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை கடுமையான பாதிப்பை கண்டுள்ளது. கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள கம்பிகள் தொடர்ந்து வெப்பத்தில் இருப்பதால் பாதிப்பு அதிகரித்துள்ளது.
முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது
இன்று மாலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 2வது தளத்தில் இருந்த முன்பக்க சுவர் இடிந்து விழுந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இதனால் முன் எச்சரிக்கையாக கட்டிடத்தை வேடிக்கை பார்ப்பதற்காக யாரும் அருகில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
மேலும் தொடர்ந்து எரிந்து வரும் தீயால் அந்தப் பகுதி கடுமையான புகைமூட்டத்துடன் காணப்படுகிறது. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மாற்று இடங்களில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு அந்தப் பகுதியில் மீட்புப் பணி மற்றும் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் மாஸ்க் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.