புயலோடும் போராட்டம்.. பணமின்றி சென்னை மக்கள் படும் துயரை அன்றே சொன்ன 'அன்பே சிவம்' கமல்!
கமல் ஹாசன் நடித்த அன்பே சிவம் திரைப்பட காட்சி ஒன்று, தற்போதைய சென்னை புயல் காட்சிகளை ஒத்து காணப்படுகிறது என்று சொல்கிறது ஒரு பேஸ்புக் போஸ்ட்.
சென்னை: நடிகர் கமல்ஹாசனை தமிழகத்தின் நாஸ்டர்டாமஸ் என செல்லமாக அழைப்பார்கள் அவரகளது ரசிகர்கள். உலகில் தற்போது நடைபெறும் நிகழ்வுகளுடன், கமல்ஹாசனின் பழைய திரைப்படங்களில் இடம்பெற்ற காட்சிகளை ஒப்பிட்டு, "அப்போதே சொன்னார் கமல்" என ரசிகர்கள் புகழ்வதுண்டு.
அதிலும் அன்பேசிவம் திரைப்படம் ஒரு மைல் கல். அப்படத்தில் இருந்துதான் இதுபோன்ற ஏகப்பட்ட காட்சிகளை எடுத்துப்போட்டு அலசுவர் ரசிகர்கள்.

இப்போதும் ஒரு காட்சி சென்னை மக்களுக்கு மிகவும் பொருந்திப்போகிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தை கொண்டுவர மோடி அரசு திட்டமிட்டு காய் நகர்த்தும் நிலையில் வர்தா புயல் போன்ற ஒரு இயற்கை சீற்றத்தின்போது டிஜிட்டல் பொருளாதாரம் முழுக்க பலனளிக்கவில்லை. கையில் காசு இல்லாமல், கரண்ட் இன்றி செயல்படாத ஏடிஎம், ஸ்வைப் மெஷின்களை வைத்துக்கொண்டு சென்னைவாசிகள் அல்லோகலப்படுகிறார்கள்.
இதுகுறித்து அன்பேசிவம் படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை பேஸ்புக் போஸ்டாக வெளியிட்டுள்ளார் எம்.எம்.அப்துல்லா என்பவர். அந்த போஸ்ட் பெருவாரியாக ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதை பாருங்கள்.
"அன்பே சிவம்" படத்தில் ஒரு புயல்மழை சமயத்தில் கமலும், மாதவனும் பயணித்துக்கொண்டு இருப்பார்கள். கை அல்லது பர்ஸ் நிறைய டெபிட்கார்ட் கிரெடிட்கார்ட் வைத்து இருந்தும் அந்த சமயத்தில் மாதவனால் ஒரு டீ கூட வாங்க முடியாது.பேரிடரை உங்கள் முதலாளித்துவ மாடலால் சமாளிக்க முடியாது என்று சொல்லி கமலஹாசன் வாங்கிக் குடுப்பார். இப்போது ஒவ்வொரு சென்னைவாசியும் இதை அனுபவிக்கின்றனர். கேஷ்லெஸ் எகனாமியை அன்றே சொன்ன மஹான்.
இவ்வாறு சொல்கிறது அந்த போஸ்ட்.
புயலால் மின் இணைப்பு கிடைக்காமல் திண்டாடும் சென்னை மக்கள், தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவாவது, பழைய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பேஸ்புக் போஸ்ட் வலியுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications