தலை தூக்கும் விபரீதமான ரயில் தின கொண்டாட்டம்.. எங்கே போகிறது மாணவ சமுதாயம்?
Recommended Video
சென்னை : பஸ்டே என்ற பெயரில் பேருந்துகள் மீது ஏறி பயணம் செய்து அராஜகம் செய்த மாணவர்கள் நேற்றைய தினம் மின்சார ரயிலில் பட்டா கத்திகளுடன் சென்ற காட்சிகள் மாணவ சமுதாயம் எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை அனைவர் மனதிலும் எழுப்பியுள்ளது.
கல்லூரி மாணவர்களிடையே எந்த கல்லூரி கெத்து என்று காட்டிக் கொள்வதில் மாணவர்களிடையே எப்போதுமே போட்டி இருக்கும். நாள்தோறும் பேருந்துகளில் ஏறி கானா பாட்டு பாடி பலரையும் முகம் சுளிக்க வைத்தவர்கள், பஸ் டே கொண்டாட்டம் என்ற பெயரில் அரசுப் பேருந்துக்கு அலங்காரம் செய்து பேருந்தின் மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
பஸ்டே கொண்டாடும் தினத்தில் பேருந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து தங்கள் விருப்பப்படி பாட்டு பாடுவது பேருந்தின் மீது ஏறி நின்று ஆட்டம் போடுவது என்று மாணவர்கள் அராஜகம் செய்தனர். இதனையடுத்து பஸ்டே கொண்டாட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
விபரீதமான ரயில் தின கொண்டாட்டம்
எனினும் அவ்வபோது தடையை மீறி பஸ்டே கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் மாணவர்கள். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சென்னையை சேர்ந்த பிரபல கல்லூரியின் மாணவர்கள் மின்சார ரயிலில் ஏறிச் சென்று ரயில் டே கொண்டாடியது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
அராஜகத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
ரயிலில் தொங்கிக் கொண்டும், கானா பாட்டு பாடியும், பட்டா கத்தி உள்ளிட்டவற்றை ரயில் நிலைய நடைமேடையில் உரசியும் சென்றுள்ளனர். மாணவர்களின் இந்த செயல் பலரையும் அச்சமடைய வைத்துள்ளது, மேலும் இதோ நின்று விடாமல் ரயிலில் பட்டாசுகளை எடுத்து செல்வது ஆபத்தானது என்பது கூடி தெரியாத கல்வி கற்கும் மாணவர்கள், பட்டாசுகளை எடுத்துச் சென்று கையில் வைத்து பட்டாசுகளை வெடித்து வீசியுள்ளனர்.
இது தான் கெத்தா?
இத்தோடு நின்றுவிடாமல் பிளாட்பாரத்தில் இறங்கி குத்தாட்டம் போட்டுள்ள மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி தான் கெத்து என்றும் கோஷமிட்டுள்ளனர். நெமிலிச்சேரியில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் வரை மாணவர்களின் இந்த அராஜகம் நீடித்துள்ளது.
4 மாணவர்கள் பிடிபட்டனர்
பட்டாபிராமில் மாணவன் ஒருவனை ரயில்வே போலீசார் பிடித்துள்ளனர். அவர் அளித்த தகவலின் பெயரில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மாநிலக் கல்லூரி மாணவர்கள் என்று சொல்லப்படுகிறது.
மோதல் காரணமாக
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதற்காகவே பட்டாக் கத்திகளை கொண்டு சென்றதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே பட்டா கத்தி கொண்டு வந்தவர்கள் தங்கள் கல்லூரி மாணவர்கள் என்பது உறுதியானால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பச்சையப்பன் கல்லூரி தெரிவித்துள்ளது.
மாணவ சமுதாயம் இதற்காகவா?
படித்து பட்டம் பெறுவார்கள், குடும்பத்தை காப்பாற்றுவார்கள் என்று பெற்றோர் தங்களின் பிள்ளைகளை கல்லூரிக்கு படிக்க அனுப்புகின்றனர். ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் இந்த அராஜகம் எதிர்கால மாணவ சமுதாயம் எந்த திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.