சென்னை வடபழனி குருக்கள் மனைவி கொலை வழக்கு விசாரணையில் தேக்கம்.. யார் காரணம்?
Recommended Video
சென்னை: நகரின் மையப்பகுதியான வடபழனியில் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள குடியிருப்பில் கோவில் குருக்களை கட்டிப்போட்டு, அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை தேக்கம் அடைந்துள்ளது.
கடந்த வியாழன் அதிகாலை, வடபழனி சிவன் கோவிலில் குருக்களாக பணியாற்றும் பிரபுவும், அவரது மனைவி ஞானப்ரியாவும் கை, கால் கட்டப்பட்டு கடுமையாக தாக்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டனர். அதிக ரத்தம் வெளியேறியதால் ஞானப்பிரியா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபு மயக்கம் தெளிந்தபிறகு சொந்த ஊரான காஞ்சிபுரம் புள்ளலூரில் தனது மனைவியின் இறுதிச்சடங்குக்காக சென்றுள்ளார். பலரையும் அதிரச்செய்துள்ள இந்த கொலை வழக்கு இன்னும் முழுமையான தகவல்கள் கிடைக்காததால் வடபழனி போலீசாரின் விசாரணையில் தேக்கம் அடைந்துள்ளது.
பிரபு போலீசாரிடம் சொன்னது என்ன?
இந்த கொலை குறித்து வாக்குமூலம் அளித்துள்ள பிரபு, இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை தாக்கியதாக கூறியுள்ளார். ஆனால், அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தால், அந்த நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல், மயக்க ஸ்பிரே அடிக்கத்த கொள்ளையர்கள், ஸ்பிரே முறையாக வேலை செய்யாததால் ஆத்திரப்பட்டு, ஞானப்ரியாவை கொடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
கணவரே கொன்றாரா?
பிரபு கொடுத்த தகவல்கள் போதுமானதாக இல்லை என்று கருதும் போலீசார் அவரிடம் முழுமையாக விசாரணை நடத்தவேண்டும் என்று கருதுகிறார்கள். குறிப்பாக, பிரபுவே அவரது மனைவியை கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாக வடபழனி போலீசார் கூறியுள்ளனர்.
நகைக்காக கொலையா?
கை,கால்களை கட்டிப்போட்டு, ஞானப்ரியாவின் கழுத்தில் இருந்த 12 சவரன் தங்க நகைகள் மட்டும் கொள்ளையடிக்க கொலை செய்யும் அளவுக்கு சாதாரண கொள்ளையர்கள் துணியமாட்டார்கள். எனவே இதில் வேறு ஏதோ நடந்துள்ளது என சந்தேகப்படுகிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
தடயம் கிடைக்கவில்லை
ஞானப்ரியாவின் உறவினர்கள், நண்பர்கள் அதேபோல், பிரபுவுடன் பணியாற்றுபவர்களையும் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். நெருக்கமான குடியிருப்பிற்குள் புகுந்து கொள்ளையடித்துவிட்டு, எந்த தடயமும் இன்றி கொள்ளையர்கள் எப்படி தப்பித்திருக்க முடியும் என்று காவல்துறையினர் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.