பாஜகவை விமர்சிப்பார்கள் என்பதால் கம்யூனிஸ்டுகளை ஜெயலலிதா கழற்றி விட்டார்: ப.சிதம்பரம்
காரைக்குடி: தேர்தல் பிரசாரத்தில், பா.ஜ.கவை விமர்சிப்பார்கள் என்பதால் தான் கம்யூனிஸ்ட்களைத் தனது கூட்டணியிலிருந்து வெளியேற்றி விட்டார் ஜெயலலிதா என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் திட்டத்தில் இருக்கிறார் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா என சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார் ப.சிதம்பரம்.
இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட்டுகள் வெளியேறக் காரணம் என்பது குறித்து சிதம்பரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
லோக்சபா தேர்தல் முடிவு, வெளிவந்த பிறகு, மத்தியில் புதிய அரசு அமைப்பதில், இரண்டு கட்சிகள் மட்டுமே, முனைப்பு காட்ட முடியும், என்பது பால பாடம். ஒன்று காங்கிரஸ், மற்றொன்று, காங்கிரசுக்கு சவால் விடும் பா.ஜ., இந்த, இரண்டு கட்சிகள் பற்றியும், தங்கள் நிலைப்பாடு குறித்தும், அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள், இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
அ.தி.மு.க., எடுக்கக் கூடிய நிலைப்பாட்டை பற்றி, எள் அளவும் சந்தேகமில்லை. அது பா.ஜ.,வின், 'பி' டீம், என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். பா.ஜ.,வின் பல கொள்கைகளில், அ.தி.மு.க.,வுக்கு உடன்பாடு உண்டு. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோவில் கட்டுவது, கரசேவைக்கு ஆதரவு, சேது சமுத்திர திட்டத்தை முடக்குவது, பொது சிவில் சட்டம் என்று, பல விஷயங்களில், இந்த, இரண்டு கட்சிகளுக்கும் ஒரே கொள்கை தான். இரண்டு கம்யூ., கட்சிகளையும், தம்முடன் கூட்டணியில் இணைத்து கொண்ட ஜெ., பின், பிரசாரத்தில், கம்யூ.,க்கள், பா.ஜ.,வை விமர்சிப்பரே என்ற அச்சம் காரணமாகவே, அந்த இரு கட்சிகளையும், ஜெ., கழற்றி விட்டார்.
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் நிர்ப்பந்தத்தால் தான், இந்த முடிவை அவர் எடுத்தார். ஜெ., பேசும் எந்த பொதுக் கூட்டத்திலும், பா.ஜ.,வை விமர்சிப்பது கிடையாது. ஒரு வார்த்தை கூட, பேசியது கிடையாது. அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் அரசு என்று சொல்கிறாரே தவிர, யாருடைய தலைமையில் அமையும் அரசில் அங்கம் வகிப்போம், யாருடைய தலைமையில் அமையும் அரசில், அங்கம் வகிக்க மாட்டோம் என, சொல்வது கிடையாது. லோக்சபா தேர்தலுக்கு பிறகு, மத்தியில் அரசு அமைக்கும் முயற்சியில், பா.ஜ., ஈடுபடும்போது, அதற்கு ஆதரவு கரம் நீட்டும், முதல் கட்சியாக அ.தி.மு.க., இருக்கும் என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன்.
தி.மு.க.,வின் நிலைப்பாடு குறித்த, என்னுடைய கருத்தை நாளை சொல்வேன்' என இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.