டிஜிபி, கமிஷனர் இல்லாததை பிரச்சனையாக்குவது வருத்தம் அளிக்கிறது.. சட்டசபையில் 'ஃபீல்' பண்ணிய எடப்பாடி
டிஜிபி, கமிஷனர் இல்லாதததை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சனையாக்குவது வருத்தம் அளிக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை: டிஜிபி, கமிஷனர் இல்லாதததை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சனையாக்குவது வருத்தம் அளிக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். டிஜிபி கமிஷனர் வந்தால்தான் மானியகோரிக்கை மீது பேசுவேன் என துரைமுருகன் வலியுறுத்தியதையடுத்து பழனிச்சாமி இவ்வாறு கூறினார்.
தமிழக சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது டிஜிபி , கமிஷனர் சட்டசபைக்கு வந்தால் தான் காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் தாம் பேசப்போவதாக எதிர்க்கட்சி உறுப்பினரான துரைமுருகன் சட்டசபையில் கூறினார்.
உள்துறை, தலைமை செயலாளர் இருக்கும் போது டிஜிபி வரவில்லை என்பது நியாயமற்றது என்று அமைச்சர் தங்கமணி கூறினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த துரைமுருகன் காவல்துறையின் விவாதம் நடக்கும் போது டிஜிபி, கமிஷனர் இருப்பது மரபு என்று கூறினார்.
துரைமுருகன் குற்றச்சாட்டு
கொலை, கொள்ளை என பல வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்றும் துரைமுருகன் கூறினார். போலீஸ் அதிகாரி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை என்றும் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
டிஜிபி வந்தால்தான் பேசுவேன்
விவாதத்தின் போது அந்தந்த அதிகாரிகள் இருந்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துரைமுருகன் கூறினார். எனவே டிஜிபி வந்தால்தான் பேசுவேன் என்றும் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி வருத்தம்
இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவல்துறை மானியத்தில் அனுபவமிக்க உறுப்பினரான துரைமுருகன் பேச உள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் எடுத்ததும் டிஜிபி இல்லாததை ஒரு பிரச்சனையாக துரைமுருகன் கருதுவது வருத்தம் அளிக்கிறது என்றார்.
சட்டசபைக்கு வந்த டிஜிபி
இதையடுத்து டிஜிபி ராஜேந்திரன் சட்டசபைக்கு வந்தார். டிஜிபி வந்தால்தான் பேசுவேன் என துரைமுருகன் பிடிவாதமாக இருந்ததால் டிஜிபி ராஜேந்திரன் சட்டசபைக்கு வரவழைக்கப்பட்டார்.