ஆளுநர் ஆய்வு குறித்து ஒரு வழியாக வாய் திறந்தார் முதல்வர் எடப்பாடியார்!
ஆளுநர் ஆய்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை: ஆளுநர் ஆய்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
கோவையில் கடந்த வாரம் நடைபெற்ற பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பின்னர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் பல இடங்களில் அவர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மாநில சுயாட்சி உரிமையில் மத்திய அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

அமைச்சர்கள் வரவேற்பு
ஆனால் தமிழக அமைச்சர்கள் ஆளுநரின் ஆய்வு தவறில்லை என்றனர். ஆளுநர் ஆய்வு வரவேற்க தக்கது என்றும் ஆளுநர் ஆய்வு செய்தால் தான் மாநிலத்துக்கு என்ன தேவை என மத்திய அரசுக்கு தெரியும் என்றும் தெரிவித்தனர்.

ஆளுநர் ஆய்வு குறித்து கேள்வி
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆளுநர் ஆய்வு செய்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆய்வு என்பதே தவறு
அதற்கு பதிலளித்த அவர் ஆளுநர் ஆய்வு செய்தார் என்பதே தவறு என்றார். அரசின் திட்டங்களை அதிகாரிகளிடம் ஆளுநர் கேட்டறிந்தார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

திட்டமிடப்பட்டது அல்ல
ஆளுநரின் ஆய்வு திட்டமிடப்பட்டது அல்ல என்றும் முதல்வர் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற அவர் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

எதிர்க்ட்சிகள் குற்றச்சாட்டு
ஆளுநர் மாநில அரசு சிறப்பாகவும் தெளிவாகவும் செயல்படுகிறது என்று பாராட்டியுள்ளார் என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகள் தான் வேண்டும் என்றே குற்றம்சாட்டுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications