களைகட்டியது கிறிஸ்துமஸ் ... தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்
தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைவர்கள் பலரும் இதையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டியது. சர்சுகளில் பொதுமக்கள் பிரார்தனை செய்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் கேக் வெட்டி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடுவார்கள். முதியோருக்கு கேக் மற்றும் புத்தாடைகள் கிறிஸ்தவ ஆலயங்களில் வழங்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஓட்டி தமிழகம் முழுவதும் கேக் விற்பனை படு சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஸ்வீட் ஸ்டால்களில் விதவிதமான வடிவங்களிலும், வண்ணங்களிலும் கேக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுளளன.
கோவில்பட்டி நகரில் பஸ் நிலையம், புதுரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி கடைகளில் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை களைகட்டி காணப்படுகிறது. பிளம் கேக், கீரிம் கேக், தனி கேக், குரூப் கேக், புட்ஸ் கேக், ரோல் கேக் என விதம் விதமாக விறபனை செய்யப்பட்டு வருகிறது. விமானம்,.முயல், மரம், வாத்து, போன்ற பல்வேறு வடிவங்களில் கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த வகை கேக்குகளை கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து பேக்கரி கடை உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னி்ட்டு பல்வேறு வடிவங்களில் கேக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
சில்லரை மற்றும் மொத்தமாகவும், குழந்தைகளுக்கான ரோல் கேக்குகளை பலரும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். ஒருகிலோ கேக் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
தலைவர்கள் வாழ்த்து:
கிறிஸ்துமஸையொட்டி திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்தவர்களை பொறுத்தவரை கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும், வேலை வாய்ப்புகளை பெறுவதற்கும் மதம் மாறிய ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கு-பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு சலுகையை 1974-ம் ஆண்டில் வழங்கியது தி.மு.க. ஆட்சி. இந்த சலுகையை மதம் மாறிய ஆதி திராவிட கிறிஸ்தவர்களின் அனைத்து தலைமுறைகளுக்கு நீட்டித்து 1975-ல் ஆணையிட்டது.
1989-ல் மாநில சிறுபான்மையினர் நல ஆணையம், 1999-ல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 2007-ல் சிறுபான்மையினர் நல இயக்ககம் ஆகியவற்றை உருவாக்கி, சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்திட வகை செய்தது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டத்தை 2006-ல் ரத்து செய்தது.
செய்த பணிகள்
2010-ல் வள்ளுவர்கோட்டம் அருகே கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்திற்கு அன்னை தெரசா மாளிகை என பெயர் சூட்டப்பட்டது. வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோருக்கு 1968-ல் பேரறிஞர் அண்ணா தலைமையேற்று நடத்திய 2-ம் உலக மாநாட்டின்போது, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சிலைகள் எடுத்து சிறப்பித்தது. நெல்லை மாவட்டம் இடையன்குடியில் கால்டுவெல் வாழ்ந்த இடம் நினைவிடமாக புதுப்பிக்கப்பட்டது. முல்லை பெரியாறு கட்டி முடித்த பென்னிகுவிவுக்கு மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் சிலையெடுக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் விடுமுறையான டிசம்பர் 25-ந் தேதி அன்று மத்திய அரசின் சில அமைச்சகங்களுக்கும், மத்திய அரசுக்கு ஆதரவான சில அமைப்புகளுக்கும் தனித்தனியே பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளதால் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினரும் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிலர் இந்துத்துவா கோட்பாட்டை புகுத்த தீவிரம் காட்டுவதுடன், நாடு முழுமைக்கும் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர போவதாகவும் அறிவித்துள்ளனர். மத்திய அரசும், மற்றைய அமைப்புகளும் நாட்டு நலன் கருதி இத்தகைய அணுகுமுறைகளை தவிர்த்திட வேண்டும். சிறுபான்மையினர் நலன்களை காத்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேபோல பல்வேறு தலைவர்களும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.