ஒருதலைப்பட்சமாக திமுக அறிக்கை வருத்தம் அளிக்கிறது... ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்
போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரத்தில் திமுக ஒருதலைப்பட்சமாக அறிக்கை வெளியிட்டுள்ளது வேதனை அளிப்பதாக ஸ்டாலினிடம் முதல்வர் தெரிவித்தார்.
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் விவகாரத்தில் திமுக ஒருதலைப்பட்சமாக அறிக்கை வெளியிட்டுள்ளது வருத்தம் அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 4-ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்துகள் போதிய அளவில் இயக்காததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

தீவிரமடையும்
இதுவரை 23 முறை பேச்சுவார்த்தை நடத்தி விட்ட நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

10 நிமிடம் முதல்வருடன் பேச்சு
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வருடன் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடர்பாக தொலைபேசியில் நேற்று பேசினார். போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனையில் சமூக தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இருவரும் இந்த போராட்டம் தொடர்பாக 10 நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது.

வாபஸ் பெற அறிவுறுத்தல்
இந்நிலையில் முதல்வரிடம் பேசியது தொடர்பாகவும், அவர் பதிலளித்தது தொடர்பாகவும் திமுக அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் கூறுகையில், திமுக வெளியிட்ட அறிக்கை ஒரு தலைப்பட்சமானது. தொழிற்சங்கங்களிடம் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற அறிவுறுத்துங்கள் என்று ஸ்டாலினிடம் கூறினேன்.

பணிக்கு திரும்ப வேண்டும்
மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தேன். ஆனால் திமுகவோ ஒருதலைப்பட்சமாக அறிக்கை வெளியிட்டுள்ளது வருத்தத்தை அளிக்கிறது. மக்கள் நலன் கருதி போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications