எடப்பாடி ஒன்றும் சசிகலா வீட்டு வாட்ச்மேன் அல்ல.... கே.சி. பழனிச்சாமி பொளேர்
எடப்பாடி ஒன்றும் சசிகலா வீட்டு வாட்ச்மேன் அல்ல என்று முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை: முதல்வர் பதவி என்பது ஒன்றும் சசிகலா வீட்டு வாட்ச்மேன் பதவி அல்ல, அவர் நியமிப்பதற்கு என்று முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுகவில் தினகரனுக்கும், எடப்பாடிக்கும் இடையே கடுமையான அதிகார போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் ஒருவரை ஒருவர் அன்றாடம் வசை பாடி வருகின்றனர்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துள்ளதால் தினகரன், எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் மீது கடும் விமர்சனங்களை எடுத்து வைக்கிறார். தினகரனோ ஜெயலலிதா இறந்தவுடன் ஓபிஎஸ்ஸையும், சசிகலா சிறை செல்ல நேரிட்டபோது எடப்பாடியையும் சசிகலாதான் முதல்வராக்கினார். ஆனால் அவர் சசிகலாவுக்கு துரோகம் இழைத்து விட்டார் என்று தினகரன் குற்றம்சாட்டுகிறார்.
கே.சி.பழனிச்சாமி பேட்டி
சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் சசிகலாவால் பல அதிமுக பிரமுகர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். கடுமையாக உழைத்தவர்களும் சசிகலா குடும்பத்தினரால் அதிமுகவில் இருந்து வெளியேறினர்.
நானும் பாதிக்கப்பட்டேன்
கடந்த 2002-இல் ராஜ்யசபா உறுப்பினர் பதவி எனக்கு வழங்க ஜெயலலிதா உத்தேசித்தபோதும், அதேபோல் 2011-இல் ஈரோட்டில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஜெ.உத்தேசித்தபோதும் அதை கெடுத்தவர்கள் சசிகலா குடும்பத்தினர். 30 ஆண்டுகளாக அதிமுகவில் உள்ள நான் சசிகலாவை நேருக்கு நேர் சந்தித்தது கிடையாது.
உதவியாளர்
2011--ஆம் ஆண்டு சசிகலா மன்னிப்பு கடிதம் அளித்து ஜெயலலிதாவின் உதவியாளராக மட்டுமே செயல்பட்டு வந்தார். ஜெயலலிதாவுக்கு பிறகு தன் குடும்பத்தினர் மட்டுமே கட்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சசிகலா நினைத்திருந்தார்.
குடும்ப ஆட்சியை ஒழிக்க...
குடும்ப ஆட்சியை ஒழிக்கவே இன்று சசிகலாவை நாங்கள் எதிர்க்கிறோம். சசிகலா, அவரது குடும்பத்தினர் தவிர்த்து யார் வந்தாலும் தற்போது கட்சியில் சேர்த்து கொள்ள தயாராக உள்ளோம். ஏன் தங்கதமிழ் செல்வன் வந்தாலும் அவரையும் ஏற்போம்.
வாட்ச்மேன்
எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது சசிகலா அல்ல. எம்எல்ஏக்கள்தான். அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு யார் வேண்டுமானாலும் ஆலோசனை வழங்கலாம். ஆனால் முடிவெடுப்பது எம்எல்ஏக்கள்தான். சசிகலா நியமனம் செய்வதற்கு முதல்வர் பதவி ஒன்றும் அவர் வீட்டு வாட்ச்மேன் பணி அல்ல.
கேவலப்படுத்த வேண்டாம்
எடப்பாடியை நியமித்ததே நாங்கள்தான் என்று சசிகலா தரப்பு கூறுவது எம்ஜிஆர், கருணாநிதி , ஜெயலலிதா, ஓபிஎஸ் உள்ளிட்டோர் உட்கார்ந்த முதல்வர் நாற்காலியை கேவலப்படுத்தும் செயலாகும். ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர் கொன்றுவிட்டனர் என்று ஒவ்வொரு தொண்டனின் மனதில் கொழுந்து விட்டு எரிகிறது என்றார்.