இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி குடும்பத்திற்கு ரூ. 1கோடி நிதி உதவி - முதல்வர் அறிவிப்பு
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் நிதி அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கப் போய் நடந்த சண்டையில் வீர மரணமடைந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 1 கோடி நிவாரண நிதி உதவி அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை ராஜஸ்தானுக்கு பிடிக்க சென்ற போது ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு இன்ஸ்பெக்டர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரியபாண்டியின் மரணச் செய்தி தமிழக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி தரவேண்டும் எனவும், படுகாயம் அடைந்த ஆய்வாளர் முனிசேகருக்கு உரிய உயர் சிகிச்சை அரசு செலவில் தரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனிடையே, பெரியபாண்டியின் மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முமு தகவலும் வந்த பின்னர் நிவாரண உதவி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார். ராஜஸ்தானில் இருந்து முழு தகவல் வரவில்லை என்றும் அவர் கூறினார்.
ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது கடந்த ஆண்டு ஓசூர் நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் முனுசாமி கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ஜெயலலிதா ரூ. 1 கோடி நிவாரண நிதி அளித்தார். குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்றுக்கொண்டார்.
அதே போல ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் அளிக்கப்படும் என்றும் இரண்டு மகன்களின் படிப்புச் செலவையும் அரசே ஏற்கும் என்றும் கூறியுள்ளார். காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், தலைமைக்காவலர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம், மருத்துவ செலவை முழுமையாக ஏற்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.