தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அதிகாரிகள் நியமனம்? சர்ச்சையில் சென்னை வளர்ச்சி குழுமம்
சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் மீறி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சிஎம்டிஏ) பணியாளர் நியமனம் நடத்தப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சிஎம்டிஏவில் காலியாக உள்ள 176 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை தொடங்கிய நிலையில், தேர்தல் அறிவிப்பு வரும் முன்பாக, உதவி வரைவாளர் பணிக்கான நியமன நடவடிக்கைகளை முடித்தனர்.
தேர்தலுக்கு முன்னதாக, இளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக நடத்தப்பட்டது. இதற்கு, விண்ணப்பங்கள் பெற்றது, வயது வரம்பு, கேள்வித்தாள் என எல்லா நிலைகளிலும் நடைமுறை விதிகளை அதிகாரிகள் மீறியதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்றோரின் மதிப்பெண் பட்டியல் அடங்கிய விரிவான அறிக்கை சிஎம்டிஏவில் உள்ளது
நேர்முக தேர்வு இல்லாமல், மதிப்பெண் பட்டியல் மற்றும் இடஒதுக்கீட்டு விதிமுறைகள் அடிப்படையில் உரிய நபர்களை நியமிக்க வேண்டியது கட்டாயம். இந்த பட்டியலுக்கு, சிஎம்டிஏ தலைவராகவும் உள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் வைத்திலிங்கம் கையெழுத்திட வேண்டியது அவசியம்.
அவசர சூழ்நிலை என்றால் துணை தலைவர் இந்த ஒப்புதலை வழங்கலாம். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, இப்போது இதற்கான நடவடிக்கைகள் எடுப்பது சரியாக வராது. இருப்பினும், எப்படியாவது பணி நியமனங்களை முடிக்க வேண்டும் என்று சில சிஎம்டிஏ அதிகாரிகள் இறங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதை தடுத்தால்தான் முறைகேடுகளை முறியடிக்க முடியும் என்பது தகுதியுள்ள பணிதேடுவோர் கோரிக்கையாக உள்ளது.