மாயமான ரோந்து விமானம்...சென்னை முதல் ராமேஸ்வரம் வரை 2வது நாளாக தொடரும் தேடுதல்!!
சென்னை: சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்றபோது திடீரென மாயமான கடலோர காவல்படை ‘டார்னியர்' ரக ரோந்து விமானம், நாகை அருகே கடலில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விமானத்தில் இருந்த 3 பேர் கதி என்ன என்றும் தெரியவில்லை. விமானிகளை உயிருடன் மீட்கும் பணியில் கடலோர காவல்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை முதல் ராமேஸ்வரம் வரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்தியா முழுதும் கடலோர மாநிலங்களில் ஆபரேஷன் ஆம்லா எனப்படும் தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை ஆண்டுக்கு இருமுறை நடக்கிறது. இந்த ஒத்திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி இன்று மாலை 6 மணிக்கு முடிவடைவதாக இருந்தது. ஒத்திகையில், தமிழக கடலோர காவல்படை, மத்திய கடலோர பாதுகாப்பு படை, தமிழக போலீசார் ஆகியோர் கூட்டு சேர்ந்து ஈடுபடுவர். வணிக வளாகங்கள், கோயில்கள், தியேட்டர்கள், சந்தைகள், பஸ் நிறுத்தங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். மரைன் கமாண்டோ என்றழைக்கப்படும் மத்திய கடலோர படையினர் தீவிரவாதிகள் போல கடலில் இருந்து நகருக்குள் ஊடுருவுவார்கள். அவர்களை தமிழக போலீசார் பிடிக்க வேண்டும். செவ்வாய்கிழமை பாதுகாப்பு ஒத்திகை துவங்க இருந்தது.
மாயமான விமானம்
சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து புதுச்சேரி வரை ரோந்து சென்று வர சென்னையில் இருந்து டார்னியர் என்ற விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர். விமானத்தில் துணை கமாண்டர் வித்யாசாகர், வழிகாட்டும் அலுவலர்கள் டோனி, சுபாஷ் சுரேஷ் ஆகியோர் இருந்தனர். விமானத்தை சுபாஷ் சுரேஷ் ஓட்டினார். விமானம் ஓட்டுவதில் இவர் மிகுந்த அனுபவம் பெற்றவர். திங்கட்கிழமை இரவு 9.23 மணி வரை சென்னை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்தனர். அதன்பிறகு திடீரென விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கு முன் காரைக்காலிலிருந்து 32 கடல் மைல் தூரத்திலும், சிதம்பரத்திலிருந்து 16 கடல் மைல் தூரத்திலும் விமானம் பறந்துகொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
தேடுதல் வேட்டை
இதையடுத்து கடலோர பாதுகாப்புடைக்கு சொந்தமான விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கின இரவு 10.43 மணிக்கு துவங்கிய தேடுதல் வேட்டை செவ்வாய்கிழமை வரை தொடர்ந்தது. கடலோர பாதுகாப்பு படையின் 5 படகுகள், கடற்படையின் 4 கப்பல்கள், இந்திய கடலோர காவல் குழுமத்தின் 10 படகுகள் ஆகியவை தேடுதலில் ஈடுபட்டுள்ளன. கடலூரிலிருந்து நாகை மாவட்டம் வழியாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. கடலூர், காரைக்கால், தரங்கம்பாடி, சீர்காழி அடுத்த தொடுவாய், திருமுல்லைவாசல் ஆகிய பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. சிதம்பரம் பிச்சாவரம் பகுதியிலும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
கண்டறிவதில் சிக்கல்
விபத்தில் சிக்கிய குட்டி விமானத்தில் ஏடிஎஸ்பி ரேடார் கருவி இல்லாததால் விமானத்தின் நிலை குறித்து அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்றிரவு வரை நடந்த தேடுதல் வேட்டையில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. கடலில் விழுந்ததா? சதுப்பு நில காடுகளில் விழுந்ததா? என்றும் தெரியவில்லை.
உயிருடன் மீட்க தீவிரம்
விமானத்தை தேடும் பணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு, "விமானத்தை தேடும் பணியில் கடலோர காவல்படை படகுகள் ஈடுபட்டுள்ளன. இந்த விமானம் கடலில் மிதக்கக்கூடியதுதான். எனவே விமானிகளை உயிருடன் மீட்கும் பணியில் கடலோர காவல்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை முதல் ராமேஸ்வரம் வரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது" என்ற கூறியுள்ளார்.
கடலில் விழுந்ததா?
கடலூர் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் முகேஷ், என்பவர் திங்கட்கிழமையன்று இரவு, புதுச்சேரி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கடலில் பெரிய தீப்பிழம்பு விழுந்ததை, தான் பார்த்ததாக சக மீனவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து புதுச்சேரி இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள், நாவற்குளத்தில் உள்ள தங்களது அலுவலகத்தில் செவ்வாய்கிழமையன்று அவரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அலையாத்தி காடுகளில் தேடுதல்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை துவங்கி, நாகை மாவட்டம் வேதாரண்யம் வரை 14,000 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்தி காடுகள் உள்ளன. இந்த காடுகளில் விமானம் விழுந்திருக்கலாம் என்று அஞ்சி, முத்துப்பேட்டை ரேஞ்சர் அயூப்கான் தலைமையில் வனத்துறையினர் அலையாத்தி காடுகளுக்குள் சென்று தேடினர். ஆனால் விமானத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபோல, முத்துப்பேட்டையிலும் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
ஆபரேசன் ஆம்லா ஒத்திவைப்பு
இதனிடையே விமானம் மாயமானதை அடுத்து ஆபரேஷன் ஆம்லாவை ஒத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மீண்டும் ஆபரேஷன் ஆம்லா வரும் 15 மற்றும் 16ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.