இப்படியும் ஒரு மனைவி.... !
கோவை: திருமணத்திற்கு முன்பு காதலித்து வந்தவரை மறக்க முடியாமல் அவருடன் தொடர்ந்து பழகியும், உல்லாசமாகவும் இருந்து வந்த ஒரு பெண், தாலி கட்டிய கணவரை 2 வருடமாக நெருங்க விடாமல் தவிர்த்து வந்துள்ளார். அப்படியும் அந்த அப்பாவிக் கணவர் பொறுத்துப் போனபோதும், காதலனை அடைய முடியாத நிலையால் கோபமாகி, கணவரை ஆள் வைத்துக் கொல்லவும் துணிந்து தற்போது கைதாகியுள்ளார்.
கோவை பீளமேடு அண்ணாநகர் விகாஷ் லே-அவுட்டை சேர்ந்த என்ஜினீயர் தங்கராஜ் என்பவர் சில நாட்களுக்கு முன்பு சிலரால் கடுமையாக தாக்கப்பட்டார். சரமா்ரியாக வெட்டப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கூலிப்படையை ஏவி தங்கராஜை தாக்கியது அவரது மனைவி ரம்யா என்று தெரிய வந்தது. இதையடுத்து ரம்யா கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து ரம்யா பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கல்லூரியில் படிக்கும்போதே நானும் சமீர் என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்தோம். அப்போதே பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தோம். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக தங்கராஜூக்கு எனது பெற்றோர் என்னை கட்டாய திருமணம் செய்து வைத்தனர். இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. காதலனை விட்டு மற்றொருவரை கணவராக ஏற்றுக்கொள்ள என்னால் இயலவில்லை.
இதனால் முதலிரவில் இருந்தே கணவர் என்னை நெருங்காமல் பார்த்துக்கொண்டேன். தனித்தனியாகவே படுத்துக் கொண்டோம். ஏன் என்று கணவர் கேட்டால் உடல்நலம் சரியில்லை என்று கூறி சமாளித்து வந்தேன். இன்னும் 2 வருடம் கழிந்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று ஒதுங்கியே இருந்தேன். கணவரை ஒருமுறை கூட தொட அனுமதிக்கவில்லை.
ஆனால், கணவரை வேலைக்கு அனுப்பி விட்டு சமீரை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருப்போம். வெளியில் வேலை இருப்பதாக கூறிவிட்டு நானும், சமீரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தோம்.
ஆனால் இப்படியே தொடர விரும்பவில்லை. கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தேன். அவருடன் சண்டை போட்டால் அவர் பதிலுக்கு சண்டை போடுவார். அதைக் காரணமாக வைத்து பிரிய நினைத்தேன். ஆனால் நான் என்னதான் சண்டை போட்டாலும் எனது கணவர் பதிலுக்கு சண்டை போட மாட்டார். மாறாக அமைதியாகப் போய் விடுவார். இதனால் அதுவும் முடியாமல் போய் விட்டது.
இதனால் வேறு வழி தெரியாமல் கூலிப்படையை ஏவி கொல்ல முடிவு செய்தேன். ஆனால் அதில் மாட்டிக் கொண்டு விட்டேன்.
என்னைப் பொறுத்தவரை எனது காதல் நல்ல காதல்தான். ஆனால் பெற்றோரால் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டதால் ஊரார் பார்வைக்கு அது கள்ளக்காதலாக மாறி விட்டது என்று கூறியுள்ளார் ரம்யா.
கூலிப்படையை ஏவியதற்குப் பதில் ரம்யா இந்த 2 வேலைகளைச் செய்திருக்கலாம்.....
1. தனது காதலை குடும்பத்தாரிடம் சொல்லி காதலனைத்தான் மணப்பேன் என்று உறுதியாகச் சொல்லி போராடி காதலனை அடைந்திருக்கலாம் அல்லது காதலனுடன் ஓடிக் கூட போயிருக்கலாம்.
2. திருமணத்திற்குப் பிறகாவது கணவரிடம் நடந்ததைச் சொல்லி நல்லபடியாக பிரி்ந்து போயிருக்கலாம்.
ஆனால் இது எதையும் சொல்லாமல் தனக்குள்ளேயே எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு கணவரைக் கொல்லும் அளவுக்கு அவர் துணிந்திருப்பதுதான் அதிர்ச்சி தருகிறது.