மாணவர்கள் கைகளில் ஜாதிக் கயிறு கட்டினால் டிஸ்மிஸ்: நெல்லை கலெக்டர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாரதி சொன்னதை பள்ளியில் படித்தாலும் அதை மனதில் கொள்ளாத மாணவர்கள் தங்களின் கைகளில் கலர் கலராக கயிறு கட்டி தாங்கள் இந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் போக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.

1990 களில் நெல்லை மாவட்டத்தில் நடந்த ஜாதிக் கலவரங்களால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு மாண்டு போன வரலாறு இந்த மண்ணுக்கு உண்டு. தலைவர்கள் பெயரில் ஓடிய பேருந்துகள் கூட அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட கொடுமையும் இங்கு நடந்தது.

Collector warns stern action against students wearing Caste bands

இதனைத் தொடர்ந்து தலைவர்களின் பெயர்களில் இயங்கிய அரசு பேருந்துகள் ‘அரசு போக்குவரத்து கழகம் ‘என்ற ஒரே பெயரின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதற்குபின் பொறுப்பேற்ற அரசுகள், இந்த விஷயத்தில் கடுமை காட்டியதால், கலவரங்கள் ஓய்ந்தன. பெரும்பாலான ஜாதி அமைப்புகளின் தலைவர்களும் அடங்கிப் போனார்கள். ஆனால் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெல்லையில் ஜாதி பிரச்சினை மறைமுகமாக புகைந்து கொண்டிருக்கிறது. அதற்கு பள்ளி மாணவர்களும் இரையாகி வருகின்றனர்.

ஜாதி கயிறு பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கவே இந்த விவகாரம் தொடர்பாக 2 வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாணவர்களின் ஜாதி கயிறு

தமிழகத்தில் அதிக அளவில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி மோதல்களும், அதன் பின்னணியில் நடைபெறும் கொலைகளும் நடந்து வருகின்றன. இம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிலர் தங்கள் ஜாதியை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் பல்வேறு வண்ணங்களில் கயிறுகளை கட்டி வரும் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

என்ன ஜாதி என்ன கலர்

தேவர் இனத்தை சேர்ந்தவர் என்றால் கையில் மஞ்சள் கயிறு கட்டிக் கொள்ள வேண்டுமாம். நாடார் என்றால் நீல நிற வர்ணம், ஹிந்து சமூகத்தை சேர்ந்த மற்ற இனத்தவர் என்றால் குங்குமப்பூ நிறத்திலான கயிறு கட்டிக் கொள்ள வேண்டுமாம். அதேவேளையில் தலித்துகள் என்றால் பச்சை நிறமும், அருந்ததியர் என்றால் கறுப்பு, வெள்ளை என ஏதாவது கட்டிக் கொண்டுதான் வரவேண்டுமாம். மாணவர்களுக்கு கையில் கயிறு கட்டுவது அடையாளம் என்றால் மாணவிகளுக்கு பொட்டு அடையாளமாக இருக்கிறதாம்.

மாணவர்கள் மோதல்

கைகளில் வண்ணக் கயிறு கட்டி வரும் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் பள்ளி வளாகத்திலேயே கடுமையான மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. சில மாணவர்கள் தங்கள் ஜாதியைச் சேர்ந்த தலைவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை அரசு வழங்கும் இலவச பஸ்பாஸ் அட்டையின் பின்புறம் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆட்சியர் அறிவுரை

கடந்த ஜூன் மாதத்தில் மாவட்டத்திலுள்ள பள்ளி தலைமையாசிரியர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். ஜாதி வெறியைத் தூண்டும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

சாமி கயிறு

மாணவர்கள் கையில் கயிறு கட்டிக் கொண்டு வருவதற்கு தடை விதிக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்ட நிலையில், பெரும்பாலான மாணவர்கள் சாமிக்கு நேர்ச்சையாக கட்டியது என்று காரணம் கூறுவதால், பள்ளிகளாலும் நடவடிக்கை எடுக்க முடியவில்லையாம்.

மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இதனிடையே மாணவர்களிடைய ஜாதி பிரச்சினை தலைதூக்கும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் சமூகநலத்துறை முதன்மை செயலாளர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கலெக்டர் எச்சரிக்கை

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "இந்த நோட்டீஸ் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பள்ளி நிர்வாகங்களுக்கு பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜாதியை வெளிப்படுத்தும் வகையில் கயிறுகளை கட்டி வரும் மாணவர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதன்பின்னரும் கயிறு கட்டிவந்தாலோ, ஜாதி வெறியை தூண்டும் வகையில் செயல்பட்டாலோ பள்ளியிலிருந்து சம்பந்தப்பட்ட மாணவரை நீக்கவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

ஆட்சியர் கருணாகரன் எச்சரிக்கை

தேசிய மனித உரிமை ஆணைய நோட்டீசைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சாதி அடிப்படையில் வண்ண ஆடைகளையோ அல்லது கைகளில் வண்ண கயிறுகளையோ, பட்டைகளையோ அணிந்து வரக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் கருணாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாணவர்கள் டிஸ்மிஸ்

மீறினால் பள்ளிகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றுவது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனை அனுமதிக்கும் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமையில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மாறுவார்களா?

ஆட்சியரின் எச்சரிக்கையோடு நிற்காமல் ஜாதிக்கயிறு பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் முன் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கயிறு கட்டும் மாணவர்களை கண்காணிக்க ஆசிரியர்கள் இருந்தாலும் பெற்றோர்களும் அறிவுறுத்துவது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+