எட்டு ஆண்டுகளாக அதே இடத்தில்.. ஆணி அடித்தாற் போல.. ஏன் சார் ஏன்???
சென்னை: தமிழ்நாட்டில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக கலெக்டர்களாக நீடிக்கும் அதிகாரிகளால், கொதிப்பில் உள்ளனர் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். கலெக்டர் பதவிக்காக 46 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பதவியை வழங்க, அரசு தயாராக இல்லை எனக் கொதிக்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்.
ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் நடக்கும்போதும், ஆளும் கட்சிக்கு நெருக்கமில்லாத அதிகாரிகள் மாற்றப்படுவது வாடிக்கையான ஒன்று. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களோடு நெருக்கம் காட்டும் அதிகாரிகளுக்கு உயர் பதவிகளும் வழங்கப்பட்டு வந்தன.
2011ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தபோது, கலெக்டராக வந்தவர்கள் எல்லாம் இன்னும் மாற்றப்படாமல் உள்ளனர். ஒரு சில கலெக்டர்கள் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளனர். இதனால் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொதிப்பில் உள்ளனர்.
மத்திய அரசுப் பணிக்குத் திரும்ப ஆர்வம்
மாநில அரசின் இந்த செயல்பாடுகளால் வெறுப்படைந்து, மத்திய அரசுப் பணியை நோக்கி தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளனர் எனக் கொதிப்போடு பேசத் தொடங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 1 தேர்வு எழுதி, வருவாய்த்துறையில் பல நிலைகளைக் கடந்து வரும் அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் பதவி வழங்கப்படுவது வழக்கம். சகாயம் உள்பட பல அதிகாரிகள் இப்படி வந்தவர்கள்தான். நேரடியாக தேர்வு எழுதி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் இவர்களுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் என்பது தனிக்கதை.
கலெக்டர் பணிக்கு ஆர்வம் அதிகம்
பொதுவாக, மாவட்டங்களில் கலெக்டராக பணிபுரிவதைத்தான் இளம் ஐ.ஏ.எஸ்கள் விரும்புகிறார்கள். காரணம். மாவட்டத்தில் அதிரடியாக பெயர் எடுக்க முடியும் என நம்புகிறார்கள். சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்டத்தில் இருந்தபோது நல்ல பெயர் எடுத்தார். சகாயம், உதயசந்திரன், ஜோதி நிர்மலா, அமுதா என ஏராளமான ஐ.ஏ.எஸ்களை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும்.
அதிமுக குழப்பத்தால் வந்த வினை
ஆனால், தற்போது அ.தி.மு.கவில் நிலவும் குழப்பத்தால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கலெக்டர் பணியை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். பெயரளவுக்கு ஒரு சிலருக்கு மட்டுமே பதவி வழங்குகின்றனர். ஒரு கலெக்டர் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாகப் பதவியில் இருக்கிறார். இடமாற்றம் நடக்கும்போது, கலெக்டராக இருப்பவர்களையே வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்கின்றனர். இதற்குக் காரணம், ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு இவர்கள் காட்டும் விசுவாசம்தான்.
விசுவாசிகளுக்கு முதல் சான்ஸ்
இந்த ஆண்டு மட்டும் பதவி உயர்வின் அடிப்படையில் 23 பேர் ஐ.ஏ.எஸ் பதவிக்கு வந்துள்ளனர். இவர்களைத் தவிர, நேரடியாக தேர்வு எழுதி வந்தவர்கள் 22 பேருக்கும் மேல் இருக்கிறார்கள். இவர்களுக்கு நியாயமாக வர வேண்டிய கலெக்டர் பதவியைக்கூட அரசு தரவில்லை. பொதுவாக, கலெக்டராக நியமிக்கப்படுகின்றவர்கள், மூன்று ஆண்டுகள் வரையில் பதவியில் இருப்பார்கள்.
ஆணி அடித்தாற் போல உட்கார்ந்திருக்கிறார்கள்
ஆளும்கட்சிக்குப் பிடிக்கவில்லையென்றால், ஓரிரு ஆண்டுகளில் இடமாற்றம் செய்யப்படுவார்கள். தற்போது பதவியில் இருக்கும் சில கலெக்டர்கள், அமைச்சருக்கு இணையாக வாரிக் குவிக்கிறார்கள். ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், நகைக்கடைகள் என பலவற்றிலும் முதலீடு செய்கிறார்கள். சட்டவிரோத செயல்களுக்குத் துணை போகிறார்கள் என்றார் விரிவாக.
வட மாநிலங்களைப் போல
சமீபத்தில், அரசின் நலத்திட்டங்களை நிறைவேற்றாத ஏழு கலெக்டர்களை பதவி நீக்கம் செய்த சம்பவம், வட மாநிலத்தில் நடந்தது. 'இங்கும் மக்கள் நலப் பணிகளில் ஆர்வம் காட்டாத ஐ.ஏ.எஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.