புதுச்சேரியில் பெரும் பணக்காரர்களை எதிர்த்து போட்டியிடும் ஏழை மாணவர்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை தொகுதியில் கல்லூரி மாணவரை வேட்பாளராக அறிவித்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஏழை மாணவர் பிற கட்சிகளை சேர்ந்த பெரும் பணக்கார வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுகிறார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் லாஸ்பேட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கல்லூரி மாணவர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
ஆனந்த் ஹாயாக பைக்கில் சென்று மக்களோடு மக்களாக ஆகி வாக்கு சேகரித்து வருகிறார். கல்லூரி மாணவர் வேட்பாளராக இருப்பது மக்களுக்கு வியப்பும், மகிழ்ச்சியும் அளித்துள்ளது.
ஆனந்த் வெறும் மாணவர் இல்லை மாணவர்களுக்காக போராடுவதையே வேலையாக கொண்ட எஸ்.எப்.ஐ. அமைப்பை சேர்ந்தவர். பள்ளி காலம் முதலே சக மாணவ, மாணவியரின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர். இனியும் போராட துடிப்புடன் உள்ளவர்.
புதுச்சேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் எம்.எல். (சர்வதேச மனித உரிமை சட்டங்கள்) முதலாம் ஆண்டு படித்து வரும் ஆனந்த் 7ம் வகுப்பில் இருந்து இந்திய மாணவர் சங்கத்தில் உள்ளார். லாஸ்பேட்டையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான சப்தகிரி சிவக்கொழுந்து, அதிமுக வேட்பாளர் அன்பானந்தம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளரான சிட்டிங் எம்.எல்.ஏ வைத்தியநாதன் என அனைவரும் தொழில் அதிபர்கள், பெரும் பணக்காரர்கள்.
ஆனந்த் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர் அவரது தந்தை பெட்டிக்கடை வைத்துள்ளார். ஆனந்தின் 2 தங்கைகளும் பி.இ. படித்துள்ளனர்.