தமிழர்கள் உரிமைகள் பறிபோக தி.மு.க. உதவிய காங்கிரஸ்தான் காரணம்: ஜெயலலிதா
நாமக்கல்: தமிழக உரிமைகள் பறிபோக தி.மு.க. சுட்டிக்காட்டிய காங்கிரஸ் அரசுதான் காரணம் என நாமக்கல் தேர்தல் பிரசாரத்தின்போது ஜெயலலிதா கூறினார்.
நாமக்கல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
வரும் லோக்சபா தேர்தல் பொருளாதார சீரழிவில் இருந்து நாட்டை மீட்கும் தேர்தல்; நாமக்கல் தொகுதிக்கு உட்பட பகுதிகளில் கடந்த 34 மாதங்களில் சாலைகள் அமைக்க நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது; பள்ளிப்பாளையம் பகுதியில் புதிதாக சித்த வைத்திய மையம் அமைக்கப்பட்டுள்ளது; கொல்லிமலையை சுற்றுலா தலமாக மாற்ற நிதி ஒதுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் 2 பாலங்கள் கட்டப்பட்டுள்ளது; நாமக்கல், ராசிபுரம் வட்டங்களை சீரமைத்து கொல்லிமலை வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது; தீரன் சின்னமலைக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது;
மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
காங்கிரஸ், திமுக செயல்பாடுகளால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். ''கடந்த தேர்தலின்போது நாங்கள் கொடுத்த 170 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால், தி.மு.க.வினர் இதுவரை என்னென்ன நன்மைகள் செய்தனர் என்பதை பட்டியலிட்டு வாக்கு கேட்கவில்லை.
தமிழக உரிமைகள் பறிபோனது
மாறாக, கருணாநிதி சுட்டிக்காட்டுபவர் தான் பிரதமர் ஆவார் என்றுதான் வாக்கு கேட்டு வருகின்றனர். ஏற்கனவே, கருணாநிதி சுட்டிக்காட்டிய காங்கிரஸ் அரசால்தான் தமிழக உரிமைகள் பறிபோக காரணமாக இருந்தது.
தமிழினத்தை அழித்தனர்
கருணாநிதி சுட்டிக்காட்டுபவர் தான் நாட்டின் பிரதமராக முடியும் என்றால் அவர் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் பிரதமர் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் என்ன செய்தார்; தமிழ் இனத்தை அழித்தது போதாதா? இன்னும் எதற்காக அவர் சுட்டிகக் காட்டுபவர் பிரதமராக வர வேண்டும்.
ஊழல் செய்த திமுக
அதிமுக.,விற்கு அளிக்கும் ஓட்டு தமிழர்களையும், தமிழகத்தையும் வளப்படுத்துவதற்கான ஓட்டு. 2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் செய்து இந்திய வௌத்தை சுரண்டிய தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும். செய்வீர்களா ? என்றார்.
சேலத்தில் ஜெயலலிதா
இதைத் தொடர்ந்து சேலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த ஜெயலலிதா, ''காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தமிழகத்திடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டு வருகிறது. அதேபோல், தி.மு.க.வும் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
வளர்ச்சித்திட்டங்கள்
மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை மீறியும், தி.மு.க. சதித் திட்டங்களை மீறியும் தான் 36 ஆண்டுகால ஆட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொண்டுள்ளோம்'' என்று கூறிய அவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் சேலத்தில் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகளை பட்டியலிட்டார்.
உண்மையா? இல்லையா?
இதற்கு முன்னர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வாக்காளரிடம் நீங்கள் செய்வீர்களா? என்று கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இன்றைய பிரச்சாரத்தில் ஜெயலலிதவின் கேள்வி மாறியுள்ளது. செய்வீர்களா? என்பதற்கு பதில் உண்மையா இல்லையா? என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.