தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது செல்லாத வாக்குக்கு சமம்: ப.சிதம்பரம்
காரைக்குடி: தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது செல்லாத வாக்குக்கு சமம் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காரைக்குடியில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்காக அவர் வாக்கு வாக்கு சேகரித்த போது பேசியதாவது:
''காங்கிரஸ் பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து உங்களுக்குத் தெரிந்த கட்சி. 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்திருக்கிறது. ஆட்சியில் குறைகள் இருக்கின்றன; நான் இல்லை என்று சொல்லவில்லை.
இந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பா.ஜ.க. ஆட்சி செய்தது. இக்கட்சிகளைத் தவிர மத்திய அரசிலே யாரும் ஆட்சி செய்ய முடியாது.
அதிமுக, திமுக
முதலில் நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு இந்தத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு வாக்களித்து என்ன பயன்? என்பதே. மத்தியில் தி.மு.க., அ.தி.மு.க.வால் ஆட்சி அமைக்க முடியாது என்பது அவர்களுக்கே தெரியும்.
செல்லாத வாக்கு
மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் 200 எம்.பிக்கள் டெல்லிக்கு போக வேண்டும். ஆனால் தி.மு.க.வும், அதிமுகவும் போட்டியிடுவதே 39 இடங்களில் தானே. அவர்கள் எப்படி 200 எம்.பிக்களோடு டெல்லிக்கு செல்லமுடியும்?. ஆகவே அந்த இரண்டு கட்சிகளுக்கும் அளிக்கின்ற வாக்கு ஏறத்தாழ செல்லாத வாக்குக்குச் சமம்.
யாருடைய ஆட்சி வேண்டும்
இந்தத் தேர்தலை சட்டபேரவைத் தேர்தலோடு குழப்பிக் கொள்ளாதீர்கள். ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் போன்றோர் பிரசாரங்களில் பேசுவது ஏதோ சட்டபேரவைத் தேர்தல் நடப்பதுபோன்று பேசுகிறார்கள். இது நாடாளுமன்றத் தேர்தல். காங்கிரஸ் அரசு அமைய வேண்டுமா? காங்கிரஸ் அல்லாத அரசு அமைய வேண்டுமா?.
ஏழைகளுக்கு பாதுகாப்பு
சாதாரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், கிராம சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்கும், ஏழைகள், சிறுபான்மையினர் பாதுகாப்பிற்கும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.