சுதந்திர தினம்: ஆளுநர் ரோசய்யா, ஜெயலலிதா உள்பட தலைவர்கள் வாழ்த்து!
சென்னை: அனைவரும் ஒன்றுபட்டு சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் என முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் வாழ்த்து
நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் பாடுபட சுதந்திர தினத்தன்று உறுதியேற்போம். இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பேணி காத்து நாட்டில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் மக்கள் செயல்பட வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா
வெள்ளையர்களை விரட்டியடித்து நம் தாய்த் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிய நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தியாகிகளை வணங்குவோம்
நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை இந்திய மண்ணிலிருந்து விரட்டிட தன்னலமற்ற பல சுதந்திர போராட்ட தியாகிகள் தங்கள் இன்னுயிரை ஈந்து நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தனர். அத்தகைய விலை மதிப்பற்ற தியாகங்களைச் செய்து சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தியாகச் சீலர்களின் நாட்டுப்பற்றையும் தியாக உணர்வையும் போற்றி வணங்குதற்குரிய நன்னாள் இந்தச் சுதந்திரத் திருநாளாகும்.
தியாகிகளுக்கு ஓய்வூதியம்
சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றும் வகையில் அரசு, தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 9,000 ரூபாயாகவும்; குடும்ப ஓய்வூதியத்தை 4,500 ரூபாயாகவும்; மருத்துவப்படியை 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியுள்ளது. மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பறிய தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில், தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம், தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னம், தியாகி வாஞ்சிநாதன் நினைவு மண்டபம், வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம், வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம், வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் என பல்வேறு தியாகிகளின் நினைவகங்களை எழுப்பி சிறப்பித்து வருகிறது. போராடிப் பெற்ற சுதந்திரத்தை போற்றிப் பாதுகாத்து, அனைவரும் ஒன்றுபட்டு சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம்.
டாக்டர் ராமதாஸ்
இந்தியா விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இத்தனை ஆண்டுகளில் நாம் சாதித்தது என்ன? என்பதை ஆராய்ந்து பார்த்தால், நாம் பெற்றதைவிட இழந்தது தான் அதிகமாக இருக்கிறது. அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நாம் முன்னேறியிருக்கிறோம்; நிலவுக்கு சந்திராயனையும்,செவ்வாய்க்கு மங்கள்யானையும் அனுப்பியிருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. ஆனால், பசியும், வறுமையும் இன்னும் ஒழிக்கப்படவில்லை என்பதும், மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்கும் கொள்கைகளால் கோடீஸ்வரர்கள் பெருங்கோடீஸ்வரர்களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் வேதனையையும், தலைகுனிவையும் ஏற்படுத்துகிறது.
உண்மையான விடுதலைநாள்
பசி, வறுமை, வன்முறை, ஏழை- பணக்காரன் பாகுபாடு, இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணமான மது ஆகியவை ஒழிக்கப்படும் நாள் தான் நமக்கு உண்மையான விடுதலை நாள் ஆகும். எனவே, மது அரக்கனை ஒழிக்கவும், மக்களின் துயரங்கள் விலகவும், நாடு முழுவதும் அமைதி, வளம், சமத்துவம், சமூக நீதி ஆகியவை தழைத்தோங்கவும் இந்த நன்நாளில் உறுதியேற்போம்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவும், வறுமை நீங்கி வளம் பெருகவும், தமிழர் நலன் பெற்று மீனவர் பிரச்னை தீர ஒன்றுமையுடன் உழைக்க வேண்டும். வறுமையில் வாழுபவர்களின் வாழ்க்கை வளம் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
இந்தியா சுதந்திரம் அடைந்து 68-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. உலக நாடுகளில் இந்தியா முதன்மை நாடாக மாற வேண்டும் என்பதே இந்திய மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். ஆட்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு இந்திய நாடு வளம் பெற வேண்டும். இந்திய மக்கள் துன்பங்களில் இருந்து விடுதலை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.
எதிர் வரும் காலங்களில் நாட்டில் அமைதியும், முன்னேற்றமும் அனைத்து மக்களுக்கும் ஏற்படவும், வறுமை ஒழியவும், இந்த சுதந்திர திருநாள் வழிவகுக்கட்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்
இந்தியத் திருநாட்டில் மாறுபட்ட ஆட்சிகள், கட்சிகள் பல என்றிருந்தாலும், துப்பாக்கி குண்டுகளின் சத்தங்கள் உலகின் பல பாகங்களில் கேட்டுக் கொண்டிருக்கிற போது, ஒரு சுதந்திரமான வாழ்க்கை முறையும், வாக்குச்சீட்டின் மூலம் ஆட்சி மாற்றங்களை காண்கிற அற்புத நிகழ்வும் என் நேரு தந்த ஜனநாயகம் இன்றைக்கு தந்து கொண்டிருக்கிறது.
இன்றும் வாழ்க்கையின் கரையோரம் வாழ்ந்து கொண்டிருப்போர், தலைக்கு மேல் கூரை இல்லாமல் மழையிலும், வெயிலிலும் காய்ந்து கொண்டிருப்போர், சாக்கடை ஓரத்திலும், சகதியிலும் தங்களின் தின வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிற அனைவருக்கும் நல்வாழ்வு மலர வேண்டும் என்று இந்த சுதந்திரத் திருநாளில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன்
இந்தியா அரசியல் ரீதியாக சுதந்திரம் அடைந்தாலும் சமூக ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் இன்றும் முழுமையாக விடுதலை பெறவில்லை.
எனவே சமூக, பண்பாட்டு ரீதியாக அனைத்து மக்களும், சமமான உரிமையையும் வாய்ப்பையும் பெறக் கூடிய நிலையை அடைய வேண்டும் என்று இந்த சுதந்திர தின நாளில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
சமக தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ
சுதந்திரம் பெறுவதில் இருந்த ஒற்றுமை உணர்வு, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பதிலும் தொடர வேண்டும். வன்முறைகளிலிருந்தும், தீவிரவாத அச்சுறுத்தல்களிலிருந்தும் நாம் விடுபட்டு அமைதியான வாழ்வு வாழ்வதற்கு அரசாங்கத்தோடு மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து போராட வேண்டியது இன்றைய அவசியத் தேவையாகும்.
இந்தியர்கள் அனைவரும் வளமோடும், மகிழ்வோடும் வாழ்வாங்கு வாழவேண்டும் என்ற என் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, சுதந்திர திருநாள் வாழ்த்துக்களை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இ.கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன்
சுதந்திரப் போராட்ட காலத்தில் எழுப்பப்பட்ட உயரிய லட்சியக் குறிக்கோள்கள் நெடு நெட்டக்கனவாகவே நீடிக்கிறது. எனவே, மதச் சார்பற்ற இந்தியாவை பாதுகாக்க போரற்ற உலகுக்காக, வறுமை ஒழிந்து வளம் பெருக்கி இம்மண்ணில் பிறந்த அனைவரும் சரிநிகர் சமானமாக வாழத்தக்க இந்தியாவை அமைக்க, சுதந்திர தின உறுதிமொழியாக ஏற்போம்.
எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
ஏழ்மை, வேலையின்மை, ஊழல் ஆகிய கொடுமைகளிலிருந்து நமது மக்களை காக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் உணர வேண்டிய நேரமிது.
மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம் போன்ற நமது உயர்வான பாரம்பரியத்தை பேணிக்காக்கவும், ஊழலை ஒழிக்கவும் அந்நிய ஆதிக்கத்தை எல்லா வடிவத்திலும் வீழ்த்திடவும் உறுதியேற்போம்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்
தமிழக காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் எச்.வசந்த குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன், கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர், இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஒய்.ஜவஹர் அலி, திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைவர் அ.ஞானசேகரன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சே.ம.நாராயணன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வேல்முருகன் - தமிழக வாழ்வுரிமை கட்சி
நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்திய எண்ணற்ற தியாக சீலர்களைக் கொண்டது தமிழ்நாடு. ஆனால் நாடு விடுதலை பெற்று 68 ஆண்டுகள் ஆகியும் கூட இன்னமும் தமிழ்நாடு தமது வாழ்வுரிமைகளுக்காக கடுமையாக போராட வேண்டிய நிலையில்தான் உள்ளது.
தமிழகத்தில் மீனவர் சொந்தங்களின் துயரம் கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நீடிக்கிறது; 8 கோடி தமிழ் மக்களின் உறவுகளான ஈழத் தமிழரின் துயரமும் துளியும் ஓய்ந்துவிடவில்லை. இந்த தீமைகள் இல்லாத இந்திய தேசத்தை கட்டி எழுப்புவோம் என்று இந்த நாளில் சூளுரை ஏற்போம். அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாப்போம்-