ஊழல் குற்றவாளிகளுக்கு ஆயுள் கால தடை.. அதிரடி வழக்கு.. ஜெ.வுக்கு சிக்கல் வருமா?
டெல்லி: ஊழல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் காலம் முழுவதும் அரசியலில் ஈடுபடத் தடை விதிக்கக் கோரி ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளராக இருப்பவர் அஸ்வனி குமார் உபாத்யாயா. இவர் வழக்கறிஞரும் கூட. இவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பயங்கரவாதம், நக்சல் தீவிரவாதம் போன்று, நமது நாடு எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்னையாக ஊழலும், கிரிமினல்கள் அரசியலில் ஈடுபடுவதும் திகழ்கிறது. நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியவைகளில், யாரேனும் ஒருவர் குற்றச் செயலில் ஈடுபட்டால், அவர்கள் தானாக இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். வாழ்க்கை முழுவதும் அவர்களால் மீண்டும் அப்பணிக்கு வர முடியாது.
அதேசமயம், அரசியலில் அப்படி இல்லை. மாறாக, வழக்கி் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர் கட்சியை தொடர்ந்து நடத்த முடிகிறது. புதிதாக கட்சி தொடங்க முடிகிறது. இயல்பாக ஈடுபட முடிகிறது. அதிகபட்சம் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாமல் இருந்து விட்டு பின்னர் மீண்டும் போட்டியிட முடிகிறது. பதவிக்கும் வர முடிகிறது. அமைச்சராகவும் முடிகிறது.
இது பெரும் முரண் பாடாக உள்ளது. எனவே தேர்தல்களில் குற்றவாளிகள் போட்டியிடுவதை ஆயுள் முழுமைக்கும் தடை விதிக்கும்படி, மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்.
தேர்தலில் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம், தேசிய ஆணையம் ஆகியவை முன்வைத்த திட்டத்தை செயல்படுத்தும்படியும் உத்தரவிட வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி, அதிகப்பட்ச வயது ஆகியவற்றையும் நிர்ணயிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் பி.சி.பந்த் பெஞ்ச் முன்பு வந்தது. அவர்கள் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
லாலு பிரசாத் யாதவ், ஓம் பிரகாஷ் செளதாலா உள்ளிட்டோர் ஊழல் வழக்குகளில் சிக்கி தேர்தலில் போட்டியிட முடியாமல் உள்ளனர். அதேசமயம், முதல்வர் ஜெயலலிதாவும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி சிறைக்கும் போய் பின்னர் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலையானார். அதேசமயம், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அப்பீல் வழக்கில் விரைவில் விசாரணை வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில் உச்சநீதிமன்றத்தில் அஸ்வனி குமார் தொடர்ந்து வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது.