சென்னையில் மீண்டும் ஒரு கோர விபத்து.. டேங்கர் லாரி மோதி தம்பதி பலி - டிரைவர் கைது
சென்னை: கோயம்பேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியர் மீது டீசல் டேங்கர் லாரி மோதி தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய டீசல் டேங்கர் லாரி டிரைவர் பாக்யராஜ் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் தினசரியும் ஏதாவது ஒரு பகுதியில் விபத்துகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிண்டியில் பிரேக் பிடிக்காத தண்ணீர் லாரி மோதி 3 கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் இன்று மாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியர் மீது டீசர் டேங்கர் லாரி மோதியதில் குருநாதன் - விஜயலட்சுமி தம்பதியினர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த தம்பதியின் உடல்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. விபத்து ஏற்படுத்திய டீசல் டேங்கர் லாரி டிரைவர் பாக்யராஜ் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் சாலை விபத்துகள்
சென்னையில் கடந்தாண்டு 7,328 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. இந்த விபத்துகளால் 7,320 பேர் பாதிக்கப்பட்டனர். 3,406 பேர் பலத்த காயமடைந்தனர், 886 பேர் உயிரிழந்தனர். உலகில் சாலை விபத்துகள் அதிகம் நிகழும் 47 நகரங்களில் சென்னை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
விபத்துக்குக் காரணம்
அதிக வேகத்துடன் வாகனத்தை ஓட்டுவது, மது போதையில் வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவாகச் செல்வது, சாலை விதிகளை மீறுவது ஆகியவற்றால் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இருப்பினும், நகருக்குள் பெருகி வரும் வாகன நெரிசலுக்கு ஏற்றவாறு சாலை வசதியை மேம்படுத்தாமலும், புதிய சாலைகளை அமைக்காமலும் இருப்பதும் சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பதாகக் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்புகள் அதிகம்
சென்னையில் சாலைகளின் நடைமேடைகளை ஆட்டோக்கள் நிறுத்துமிடம், நடைபாதைக் கடைகள், மின் இணைப்புப் பெட்டிகள், குப்பைத் தொட்டிகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவை ஆக்கிரமித்துள்ளன. இதனால், பாதசாரிகள் நடைமேடையில் செல்ல முடியாமல் சாலை ஓரத்தில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதன் விளைவாக, சாலைகளில் வாகனங்கள் மேலும் நெரிசலில் சிக்குகின்றன.
விபத்து நடைபெறும் சாலைகள்
சென்னையைப் பொருத்தவரையில், ஜி.எஸ்.டி. சாலையில்தான் அதிக அளவில் விபத்துகள் நிகழ்கின்றன. இதற்கு அடுத்ததாக, பூவிருந்தவல்லி சாலை, ராஜீவ் காந்தி சாலை, மதுரவாயல் புறவழிச் சாலை, வேளச்சேரி சாலை, ஜி.என்.டி. சாலை, சி.டி.எச். சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் விபத்துகள் நிகழ்கின்றன.
சாலை விதிகள் மீறல்
50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்ட இந்தச் சாலைகள், அதன் பின்னர் பல லட்சம் வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில் இன்னமும் அதே அகலத்துடனேயே இருப்பதால் வாகன நெரிசலும், விபத்துகளும் தவிர்க்க முடியாததாகி வருகிறது. வாகன நெரிசலும், சாலை விதிகளை மீறுவதும் இங்கு ஏற்படும் விபத்துகளுக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.
விதிகளை மதிக்க வேண்டும்
வாகன ஓட்டிகள் சிறிது கவனக்குறைவாகச் செயல்பட்டாலும் விபத்தும், இறப்பும் ஏற்படுகின்றன. இதன் காரணமாகவே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் விபத்துகள் அதிகரித்து வருகிறது. சாலை விதிகளை அனைவரும் மதித்து நடந்தால் மட்டுமே நகருக்குள் ஏற்படும் விபத்தைத் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.