நெல்லையில் பிரபல ரவுடி என்கவுன்டர்: போலீஸ் அதிகாரிகள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிய கோர்ட்டு உத்தரவு
நெல்லை: பிரபல ரவுடி கிட்டப்பா என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நெல்லை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசூழ்ந்த மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிட்டப்பா (வயது39). இவர் நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம், சுத்தமல்லி உள்பட பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்து கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல் உள்பட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இது தொடர்பாக அவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தது. இதனால் ரவுடி கிடப்பாவை பிடிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் கடந்த 13.6.15 அன்று நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியில் பதுங்கி இருந்த கிட்டப்பாவை பிடிக்க முயன்றனர்.
அப்போது, தப்ப முயன்ற ரவுடி கிட்டப்பா மற்றும் அவனது கூட்டாளிகள், எஸ்.ஐ.,யை அரிவாளால் தாக்கியும், பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தங்களை தற்காத்துக் கொள்ள சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தனது கைதுப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கிட்டப்பா பலியானார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் ரவுடி கிட்டப்பாவின் மனைவி இசக்கியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் 5 நாட்கள் கிட்டப்பாவின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினார்கள். ரவுடி கிட்டப்பாவை போலீசார் பிடித்து வைத்து வேண்டும் என்றே சுட்டுக்கொலை செய்து விட்டதாக அவர்கள் கூறினர்.
இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர்கள் புகார் மனு கொடுத்தனர். இது தொடர்பாக ரவுடி கிட்டப்பாவின் மனைவி இசக்கியம்மாள் நெல்லை மாவட்ட முதன்மை கோர்ட்டிலும் புகார் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீது விசாரணை நடந்து வந்த நிலையில் நீதிபதி நசீர் அகமது நேற்று தீர்ப்பு கூறினார். அதில், ‘போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், ஏட்டு கிருஷ்ணசாமி, போலீஸ்காரர் சரவண சுந்தர் உள்பட 12 பேர் மீது நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்' என்று கூறினார். நெல்லை கோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்பு போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications