சென்னையை மிரட்டும் தண்ணீர் பஞ்சம்... சிக்கனமாக செலவு செய்யச் சொல்லும் அரசு
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழக்கும் ஏரிகள் வறண்டு வருவதால் பெரும் குடிநீர் பஞ்சத்தை சென்னை சந்திக்க வேண்டிய அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் உபயோகத்தை 20 சதவிகிதம் குறைத்துக்கொள்ளவேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே போதிய அளவு மழை பெய்யவில்லை. மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம் ஏரிகளில் தண்ணீர் இருப்பு அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
பருவமழை பெய்தால் மட்டுமே இனி ஏரிகள் நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் விநியோகம் தடுமாற்றம் அடைந்துள்ளது. சென்னைவாசிகள், 12 ஆண்டுகளுக்குப் பின் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை தற்போது சந்தித்து வருகின்றனர். ஏரிகள் நீர் இருப்பு, இயல்பை விட குறைந்து விட்டதால், குடிநீர் வினியோகத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரச்னையை சமாளிக்க முடியாமல், குடிநீர் வாரியம் திண்டாடி வருகிறது.
பூண்டி ஏரி
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வருவதும் நின்று விட்டதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 52 மில்லியன் கனஅடியாக குறைந்து விட்டது
வீராணம் ஏரி
சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டு விட்டது. வீராணம் ஏரியில் 3ல் 2 பங்கு தண்ணீர் உள்ளதால் அங்கிருந்து தினமும் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இன்னும் ஒரு சிலமாதங்களுக்கு மட்டுமே வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்க முடியும்.
குடிநீர் விநியோகம்
சென்னையில், கடந்த ஒரு மாதமாக, குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. வி.ஐ.பி., பகுதிகள் தவிர, பிற பகுதிகளில் சரியாக குடிநீர் வருவதில்லை; பல இடங்களில், தண்ணீர் கேட்டு, மக்கள் வீதிக்கு வந்து போராடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.மழை பெய்தால் மட்டுமே ஏரிகள் நிரம்பும் குடிநீர் பிரச்சினை தீரும் வாய்ப்பு உள்ளது.
மயிலாப்பூரின் நிலை
மயிலாப்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தினசரி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் ஆக மாறியது. சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். தண்ணீர் தட்டுப்பாட்டினை பயன்படுத்தி கேன் தண்ணீர் விற்பனை சூடுபிடித்தது.
காலி குடங்கள்
சென்னைக்கு தினமும் 834 மில்லியன் லிட்டர் குடிதண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 580 மில்லியன் லிட்டர் தண்ணீர்தான் வினியோகிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாள் விட்டு 1 நாள்தான் பல பகுதிகளுக்கு தண்ணீர் விடப்படுகிறது.இதனால் பெண்கள் காலி குடங்களுடன் தண்ணீர் பிடிக்க காத்து நிற்கிறார்கள்.
உடனே காலி
குடிநீர் வாரியம் சார்பில் குழாய் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. இது போது மானதாக இல்லை. டேங்கில் தண்ணீர் ஊற்றிய 1 மணி நேரத்தில் தண்ணீர் காலியாகி விடுகிறது.
நிலத்தடி நீர்மட்டம்
சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் பல இடங்களில் குறைந்து விட்டது. இதனால் வீடுகளில் உள்ள கிணறுகள், ஆழ் குழாய் கிணறுகளிலும் தண்ணீர் வறண்டு வருகிறது.
வற்றிப்போன கிணறுகள்
கோடம்பாக்கம் கே கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், மடிப்பாக்கம், மேடவாக்கம், நெற்குன்றம், பாடி, அம்பத்தூர், பெரம்பூர், ஆழ்வார் திருநகர், மேட்டுக்குப்பம், வளசரவாக்கம், மாதவரம், புத்தகரம் உள்பட பல பகுதிகளில் கிணறுகள் மட்டுமின்றி போர்வெல் கிணற்றிலும் வற்றிவிட்டது.
400 அடிக்கும் கீழே
400 அடிக்கு கீழே தண்ணீர் சென்று விட்டதால் ஓரளவு வசதி படைத்தவர்கள் அதிக ஆழத்துக்கு போர் போடுகிறார்கள் மற்றவர்கள் தண்ணீருக்குத் திண்டாடுகிறார்கள். இதனால் குடிநீரை அதிக விலை கொடுத்து பொதுமக்கள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விலை கொடுத்து வாங்கும் அவலம்
ஆழ்வார் திருநகர் மேட்டுக்குப்பம் சரசுவதி நகரில் நல்ல தண்ணீருக்கு 1 தொட்டியும், கிணற்று தண்ணீருக்கு ஒரு தொட்டியும் வைத்துள்ளனர்.இங்கு குடி தண்ணீர் 1 குடம் 6 ரூபாய்க்கும், சாதா தண்ணீர் 1 குடம் 2 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வளசரவாக்கம் பகுதியில் 1 குடம் தண்ணீர் 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அமைச்சர் ஆலோசனை
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநகரகுடிநீர் நிலவரம் குறித்தும், குடிநீர் விநியோகத் திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் குடிநீர் வாரிய அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
ஏரிகளில் நீர் இருப்பு குறைவு
போதிய மழையின்மையின் காரணமாக ஏரிகளில் குறைவாக நீர் இருப்பு உள்ளது. ஆந்திராவிலுள்ள தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் குடிநீர் கொடுக்கும் ஏரிகளான ஸ்ரீசைலம், சோமசீலா, கண்டலேறு ஆகிய ஏரிகளின் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தற்போது தண்ணீர் பெற இயலாத நிலை உள்ளது.
கால்வாய்கள் சுத்தப்படுத்த
சராசரியாக பெய்துவரும் மழையின் அளவைக் கொண்டு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை நிரப்புவதற்கு அந்த ஏரிகளின் நீர் பரப்பு பகுதிகளில் உள்ள கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். இதன் மூலம் ஏரிகளில் முழுவதுமாக தண்ணீரை பெருக்க இயலுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பபட்டது.
தண்ணீர் சிக்கனம்
பொது மக்களும் குடிநீர் பற்றாக்குறையினைக் கருத்தில் கொண்டு தாங்கள் உபயோகப்படுத்தும் நீரின் அளவை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்‘.
விநியோகம் செய்வோம்
தற்போது இருப்பில் இருக்கும் நீரை அனைத்து மக்களுக்கும் சமச்சீரான அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும். கூடுதலாக நீர் ஆதாரங்கள் உள்ள இடங்களை கண்டறிந்து அங்கிருந்து பெறப்படும் நீரினை சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் தேவைக்காக விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
உள்ள தண்ணிக்கே வழியில்லையே
கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது சுத்தமான, பாதுகாப்பட்ட குடிநீரை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 20 லிட்டர் மக்களுக்கு வழங்குவேன் என்று வாக்குறுதி அளித்தார் அப்போதைய எதிர்கட்சி தலைவியாக இருந்த ஜெயலலிதா. முதல்வர் ஆன உடன் மறந்து விட்டார் போல. இப்போது தண்ணீரை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இங்க உள்ள தண்ணிக்கே வழியில்லையாம் ஆனால் சுத்தமான தண்ணீர் எப்படி கிடைக்கும்? என்பது நம்பி ஓட்டு போட்ட மக்களின் கேள்வியாக உள்ளது.