கடலூர்: ஆட்சியர் அலுவலகம் முன் பணத்தை கொட்டி போராட்டம்- பாமக வேட்பாளர் கைது
கடலூர் : கடலூர் ஆட்சியர் முகாம் அலுவலகம் முன் பணத்தை கொட்டி பாமக வேட்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவினரின் பணப் பட்டுவாடாவை தடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாமக வேட்பாளர் தாமரைகண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் மூன்று தினங்களில் நடைபெற உள்ளது. வரும் சனிக்கிழமையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைவதால் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வாக்குகளை பெற முயற்சி செய்வதாக திமுக, அதிமுக மீது பாட்டாளி மக்கள் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் என்னதான் நடவடிக்கைகளை எடுத்தாலும், பலரும் பலவிதமாக பணப்பட்டுவாடாவை கச்சிதமாக செய்து வருகின்றனர்.
கடலூரில் அதிமுகவினர் நேரடியாகவே வாக்காளர்களுக்கு பணத்தை கொடுப்பதாக தகவல் வரவே அங்கு சென்ற பாட்டாளி மக்கள் கட்சியினர், பணத்தை பறிமுதல் செய்தனர்.
பணம் முழுவதையும் கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பு கொண்டு வந்து கொட்டினார். கண்களைக் கறுப்புத்துணியால் கட்டிக்கொண்ட தாமரைகண்ணன் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் ஏராளமானேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது அவர்கள் வலியுறுத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனையடுத்து வேட்பாளர் தாமரைக்கண்ணன் உட்பட ஏராளமான பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.