சென்னையில் திடீர் மழை... சாலைகளில் வெள்ளம்: உருவாகிறது புதிய புயல் 'ஹுட் ஹுட்'
சென்னை: சென்னையில் கனமழை பெய்துவருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கடந்த இரண்டுநாட்களாக வெயில் கொளுத்திய நிலையில் இன்று மதியம் பெய்த திடீர்மழை சென்னைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்தமான் நிகோபார் பகுதியில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த புயல் அடுத்து வரும் நாட்களில் ஆந்திர கடற்கரையோர பகுதிகளை அடையும் என தெரிகிறது.
அப்படி நிகழ்ந்தால் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக இந்த புயல் இருக்கும் எனவும், இதற்கு ஹுட் ஹுட்(HUDHUD) என பெயரிடப்பட உள்ளது. இது ஓமன் நாட்டில் உள்ள பிரபலமான அழகான பறவையின் பெயராகும்.
அக்டோபர் 12ஆம் தேதி இந்த ஹுட்ஹுட் புயல் ஒடிஷாவை தாக்கும் என்றும் வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருந்ததைப்போலவே சென்னையில் மதியம் முதல் கனமழை கொட்டிவருகிறது.மயிலாப்பூர், மந்தைவெளி, பாரிமுனை, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது.
அதேபோல சென்னையில் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது.