தண்டனை அறிவிக்கப்பட்ட பின்பே லாலு எம்.பி. பதவி பறிப்பு குறித்து முடிவு- சபாநாயகர் மீரா குமார்
கோயம்புத்தூர்: தீவன ஊழல் வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட பிறகு தான் லாலு பிரசாத் யாதவின் எம்.பி. பதவி பறிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனே பதவி இழப்பர் என்றும், அவர்கள் குறைந்தது 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
லாலுவுக்கு சிக்கல்
இந்நிலையில் பீகாரில் நடந்த கால்நடை தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜெகதீஷ் சர்மா உள்பட 45 பேர் குற்றவாளிகள் என சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வருகிற 3ந்தேதி அறிவிக்கப்படுகிறது.
தண்டனை அறிவித்தால்..
இவர்களில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஜெகதீஷ் சர்மா ஆகியோர் தற்போது எம்.பி.யாக பதவி வகித்து வருகின்றனர். தண்டனை அறிவிக்கப்படும் நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இவர்கள் இருவரின் பதவியும் பறிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபாநாயகர் கருத்து
இந்த நிலையில் கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த, லோக்சபா சபாநாயகர் மீரா குமாரிடம் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஜெகதீஷ் சர்மா ஆகியோரின் எம்.பி. பதவி எப்போது பறிக்கப்படும்? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த மீரா குமார், கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் உள்பட 45 பேர் குற்றவாளிகள் என்ற நீதிமன்ற தீர்ப்பை கோவையில் வந்திறங்கிய பிறகு தான் அறிந்தேன். ஆனால் அவர்களுக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வழக்கில் லாலு பிரசாத் மற்றும் ஜெகதீஷ் சர்மா ஆகியோருக்கான தண்டனை விபரம் அறிவிக்கப்பட்ட பின்னரே இது குறித்து முடிவு செய்யப்படும்Õ என்றார்.