சசி கும்பலோடு தீபக் சதி - திட்டமிட்டு வரவழைத்து அடித்து விரட்டினார்கள்- தீபா குற்றச்சாட்டு
சசிகலா கும்பலோடு சேர்ந்து தீபக் சதி செய்வதாக தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: சசிகலா கும்பலோடு சேர்ந்து கொண்டு தீபக் தன்னை திட்டமிட்டு வரவழைத்து குண்டர்களை வைத்து அடித்து விரட்டினான் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர், போயஸ் கார்டன் வீட்டிற்கு உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இன்று காலை திடீரென தீபா தனது ஆதரவாளர்களுடன் போயஸ் தோட்டத்திற்கு வந்தார். அங்குள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்குள் அவர் நுழைய முயற்சிக்கவே, சசிகலாவின் ஆதரவாளர்கள் திரண்டுவந்து, வழி மறித்தனர். இதனால், பெரும் தள்ளுமுள்ளு அங்கே ஏற்பட்டது.
ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அழுதுகொண்டே கணவர் மாதவனுடன் வெளியே வந்த தீபா, பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
ஜெயலலிதாவிற்கு பூஜை
அத்தை ஜெயலலிதாவுக்காகச் சில சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என தீபா சொன்னார். அதில் கலந்துகொள்ள போயஸ் தோட்டம் வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அதற்காகவே, நான் இங்கே வந்தேன்.
தீபக் சதி
போயஸ்கார்டன் வீட்டில் குண்டர்கள் இருக்கின்றனர். என்னையும் செய்தியாளர்களைம் உள்ளே விடாமல், சிலர் தடுத்தனர். செய்தியாளர்களை அடித்தனர். நான்பாட்டுக்கு என் வேலையை செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால் சசிகலா கும்பலுடன் சேர்ந்து தீபக் சதி செய்கிறான்.
தப்பித்து வெளியேறினோம்
சிவனே என்று இருந்த என்னை வரவழைத்து குண்டர்களை வைத்து அடித்து கொல்லப்பார்க்கிறான். செய்தியாளர்கள் வந்ததால் நாங்கள் தப்பித்து வெளியே வந்தோம். இல்லை என்றால் எங்களை கொலை செய்திருப்பார்கள்.
மாதவனை அழைத்தேன்
உயிர்பயத்தில் நான் மாதவனை அழைத்தேன். என்னை காப்பாற்றுவதற்காக அவர் வந்தார். செய்தியாளர்களையும் குண்டர்கள் அடித்து தாக்கினார்கள். போயஸ்கார்டன் குண்டர்களால் சூழப்பட்டுள்ளது. என்னை தடுக்க இவர்கள் யார்?
தீபா ஆவேசம்
எந்த சூழ்நிலையிலும் நிதானமாக பேசும் தீபா, யோசித்து யோசித்து கேள்விகளுக்கு பதில் சொல்லும் தீபா இன்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கொந்தளிப்புடன் கண்ணீருடன் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.