நீ லோக்கல்னா நான் தர லோக்கல்.. அரசியலை அசிங்கப்படுத்தும் டிடிவி தினகரன் - தீபா கோஷ்டி!
அரசியல் என்னும் பொதுமேடை ஏறியுள்ள தீபாவிற்கு அரசியல் நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாது போல.
சென்னை : ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்புவார் என்ற நம்பிக்கையில் அவரை அதிமுகவினர் சிலர் ஆதரித்து வருகின்றனர். ஆனால் அரசியல் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாதவராகவே தீபா இருக்கிறாரோ என்ற எண்ணம் எழுகிறது.
அதிமுகவின் அசைக்க முடியாத நம்பிக்கை நாயகியாக இருந்தவர் மறைந்த ஜெயலலிதா. அதிமுகவிற்கு மட்டுமல்ல யாருமே அசைக்க முடியாத, ஏன் எதற்குமே அஞ்சாத தனி பெண் சிங்கமாக வலம் வந்தவர் ஜெயலலிதா. தனது அணுகுமுறைகளுக்கு சரியான பதிலடியை கொடுப்பதற்காக தனி அதிகாரிகளை வைத்தும்செயல்பட்டார் ஜெயலலிதா.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேரறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை தோற்றவித்த போது,ஆக்கப்பூர்வமான கருத்துகளை மக்கள் மத்தியில் விதைத்தார். காமராஜர், அண்ணா போன்ற ஜாம்பவான்கள் காலத்தில் இருந்தே அரசியல் விமர்சனங்கள் என்பது சர்வசாதாரண விஷயம் ஆனால் அதை அவர்கள் கையாண்ட விதமே அரசியல் நாகரீகத்தை எடுத்துக் கூறுபவை.

ஆரோக்கியமான அரசியல்
இவர்கள் மட்டுமல்ல திமுகவில் கருணாநிதியுடன் இணைந்து செயல்பட்டுவிட்டு, எம்ஜிஆர், அதிமுகவை தோற்றுவித்தார். ஒன்றாக சேர்ந்து செயல்பட்டவர்கள் எதிர்எதிர் அணியில் செயல்பட்டாலும் நாகரீகமற்ற வார்த்தைகளின் அர்ச்சனை என்பது எப்போதுமே இருந்ததில்லை. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஆரோக்கியமான அரசியல் களமாகவே அவற்றை தலைவர்கள் கையாண்டனர்.

அடைமொழி வசை
இதே போன்று ஜெயலலிதாவும் திமுகவை விமர்சிக்கும் போது மிகவும் தரைமட்டமான மோசமான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தியதில்லை. அவர் திமுக குறித்து செய்த விமர்சனங்கள் எல்லாம் 'கருணாநிதி' திருக்குவளை தீயசக்தி, கள்ள ரயில் ஏறி வந்தவர், மைனாரிட்டி திமுக உள்ளிட்ட வார்த்தைகளையே பயன்படுத்தினார்.
நாகரீகம்னா என்ன?
ஆனால் ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்புவார் என்ற அதிமுகவைச் சேர்ந்த ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் தீபா அரசியலில் வந்தார். ஊடகவியல் படித்த தீபாவிற்கு அரசியல் நாகரீகம் என்பது கொஞ்சம் கூட இல்லை. சசிகலாவை புறம்போக்கு என்று திட்டியதோடு, தீபக்கையும் சரமாரியாக வசைபாடினார். சகோதரராக இருந்தாலும் மீடியாக்கள் மத்தியில் எச்சக்கலை, அழிஞ்சுடுவ என்று சொல்வதெல்லாம் அவருடைய முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.

புகழேந்தியும் அப்படித்தான்
தீபா மட்டுமல்ல அதிமுகவைச் சேர்ந்த முன்னணி அரசியல்வாதிகளும் இப்படித் தான் இருக்கிறார்கள். அண்மையில் சன் டிவியில் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய கர்நாடக மாநில அதிமுக அம்மா செயலாளர் புகழேந்தி பேசியபோது ஓ.பிஎஸ் அணியின் மைத்ரேயனை புரோக்கர், அவன் இவன் என்று ஏக வசனங்களில் பேசினார். அவரை மட்டுமல்ல ஓபிஎஸ்ஸையும் மரியாதைக்குறைவான வார்த்தைகளால் அர்ச்சித்தார்.

தரமற்ற அரசியல்
அறம் பயிலாதவர்கள் தான் இப்படி பேசுகிறார்கள் என்றால் பல நூல் கற்ற முன்னணி பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. தினகரனை கண்மூடித்தனமாக ஆதரிப்பதன் விளைவாக ஓ.பிஎஸ்ஸை தாறுமாறாகப் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்தக் கும்பல் மொத்தமுமே இப்படித்தான் தரக்குறைவான பேச்சுகளால் தரமற்ற அரசியலை நடத்தி வருகிறது என்பதற்கு இவர்களெல்லாம் ஒரு உதாரணம்.












Click it and Unblock the Notifications