எள்ளுன்னா எண்ணெய்யா இருக்குறாங்களே தீபா தொண்டர்கள்... ஆர்.கே நகரில் தீவிர பிரசாரம்!
தேர்தல் ஆணையம், ஆர்கே நகரில் இடைதேர்தல் தேதியை நேற்று அறிவித்தது. அடுத்த நாளே தீபாவின் ஆதரவாளர்கள் ஆர்கே நகரில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
சென்னை: ஜெ.தீபா ஆதரவாளர்கள், ஆர்.கே நகர் தொகுதியில் இன்றே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். தேர்தல் ஆணையம் நேற்று ஆர்கே நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடக்கும் என அறிவித்தது
ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இறந்துவிட்டார். அதனையடுத்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 12ஆம் தேதி, இடைத்தேர்தல் எனவும், எப்ரல் 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் அதிமுக சசி அணி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தேர்தல் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் நேர்முகத் தேர்வுக்குத் தயாராகி வருகிறது. ஆனால், ஜெ.யின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என நேற்றே அறிவித்துவிட்டார்.
அவர் அறிவித்த அடுத்த நாளே அவரது தொண்டர்கள் ஆர்கே நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்கே நகர் தொகுதியிலுள்ள திலகர் நகர், சிவகாமி நகர், சுனாமி குடியிருப்பு உள்பட பல இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். தேர்தல் பணி அலுவலகம் தொடங்கும் வேலையையும் ஆரம்பித்துவிட்டனராம் 'ஸ்பீடு' தொண்டர்கள்.
தீபா புதிதாகத் தொடங்கியுள்ள எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைக்கு, தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கவில்லை. ஆனால், அதற்குள் அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் இப்பொழுதே ஆர்கே நகர் தொகுதி களை கட்ட ஆரம்பித்துவிட்டது.