'இன்னோவா' நாஞ்சில் சம்பத் மீதான அவதூறு வழக்கு வாபஸ்
சென்னை: மதிமுகவின் முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது தொடர்ந்த அவதூறு வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2002 மே 10ஆம் தேதி செங்குன்றம் லட்சுமிபுரத்தில் நடந்த கூட்டத்தில், அப்போதைய முதல்வர் ஜெயலலிவை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் நாஞ்சில் சம்பத். இதையடுத்து, 2002 அக்டோபரில் ஜெயலலிதா சார்பில் நாஞ்சில் சம்பத் மீது மாநகர அரசு வக்கீல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 5வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து, அவர் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காக ஒரு அரசாணையையும் தமிழக அரசு பிறப்பித்தது.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் நேற்று 5வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "பொதுமக்களின் விருப்பத்திற்கேற்பவும், அரசியல் மாற்றம் காரணமாகவும், சமூக நல்லிணக்கம் காரணமாகவும் நாஞ்சில் சம்பத் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு வாபஸ் பெறப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.செந்தில்குமரேசன், வழக்கை வாபஸ் பெற தமிழக அரசுக்கு அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், நாஞ்சில் சம்பத் மீது தொடரப்பட்ட மூன்று அவதூறு வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.