ரூபாய் நோட்டு செல்லாது.. வெள்ளித் தொழில் பாதிப்பு.. 3 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு
ரூபாய் நோட்டு செல்லாது நடவடிக்கையால் வெள்ளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு 3 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.
சேலம்: மத்திய அரசின் செல்லாத நோட்டு நடவடிக்கையால் சேலத்தில் வெள்ளி பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் பேர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.
சேலத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளியை கொண்டு செய்யப்படும் பொருட்களின் உற்பத்தி அதிகம். கொலுசு, மெட்டி, அரைஞாண்கொடி, குங்குமச்சிமிழ் என விதவிதமான வெள்ளிப் பொருட்கள் இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்தத் தொழிலில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு, நாள் ஒன்றுக்கு 30 டன் வெள்ளிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. வெள்ளியால் செய்யப்படுகிற ஒவ்வொரு பொருளும் வெள்ளிக் கட்டியில் இருந்து 25 நிலைகளைத் தாண்டி வாடிக்கையாளர்கள் கையில் சென்று சேருகிறது.
வெள்ளித் தொழில் செய்வோருக்கு கூலியாக ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் உற்பத்தி செய்தால் 8 முதல் 10 கிராம் வெள்ளி கூலியாக வழங்கப்படுகிறது. கூலியை மொத்தமாக சேர்த்து வைத்து ஒரு கிலோ வெள்ளி வரும்போது கூலியை பெற்றுக் கொள்வார்கள். கூலியாக பெற்ற கட்டி வெள்ளியை மொத்தமாக விற்று கூலிப் பணத்தை எடுத்துக் கொள்வார்கள். இந்த முறை நீண்டகாலமாகவே இந்தப் பகுதியில் இருந்து வருகிறது.
இந்நிலையில், கூலியாக பெறும் ஒரு கிலோ வெள்ளிக்கட்டியை விற்கும் போது வாங்குவோரிடத்தில் குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரம் பணம் இருக்க வேண்டும். ஆனால் வங்கிகளில் வாரத்துக்கு அதிகபட்சமாக 24 ஆயிரம் ரூபாய்தான் வழங்கப்படுகிறது. இதனால் யாரிடம் போதிய அளவு பணம் இல்லை. இதனால் வெள்ளிக்கட்டியை கொள்முதல் செய்ய யாரும் முன்வருவதில்லை.
இதனால் கடந்த 20 நாட்களாக 80 சதவீத பட்டறைகள் மூடப்பட்டே உள்ளன. இத்தொழிலை சார்ந்த 3 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். 20 நாளில் 600 டன் வெள்ளிப் பொருட்களின் உற்பத்தி செய்யப்படாமல் அப்படியே உள்ளன. வெள்ளிப் பட்டறைகளில் வேலை இல்லாததால் சில தொழிலாளர்கள் ஓட்டல், கொரியர் உள்ளிட்ட வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர். தொடர்ந்து இதே நிலையே நீடித்தால் வெள்ளி உற்பத்தித் தொழில் மொத்தமாகவே அழிந்துவிடும் என்கின்றனர் இத்துறையை சேர்ந்த தொழிலாளர்கள்.