நெல்லையில் மீண்டும் பரவும் டெங்கு.. ஏகப்பட்ட குழந்தைகள் பாதிப்பு
நெல்லையில் மீண்டும் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நெல்லை: நெல்லை பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் முறையாக ஏடீஸ் கொசு கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு டெங்கு காய்ச்சல் பரவியது. இந்த காய்ச்சல் படிப்படியாக மாவட்டம் முழுவதும் பரவியது.

இதில் குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் இந்த காய்ச்சல் மாவட்டத்தில் பரவுவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டு டெங்கு காய்ச்சல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த மாதம் கடையநல்லூர் பகுதியில் பரவிய டெங்கு காய்ச்சல் படிப்படியாக தென்காசி, புளியங்குடி, சுரண்டை, இலஞ்சி, வீரசிகாமணி ஆகிய பகுதிகளிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக நெல்லை மாநகரில் தச்சநல்லூர் மற்றும் டவுனில் இந்த காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை பகுதியில் குடிநீர் பிரச்சினை தலை தூக்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரை பிடித்து வைத்து பல நாட்கள் பயன்படுத்தி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
டெங்கு கொசுக்கள் பொதுவாக நல்ல தண்ணீரில் தான் முட்டையிடும். இதனால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications