டெல்லியிலிருந்து சென்னை வரும் பயணிகளுக்கு டெங்கு சோதனை- சுகாதாரத்துறை தீவிரம்!
சென்னை: டெல்லியில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகின்ற காரணத்தினால் சென்னை வருகின்ற டெல்லி பயணிகளுக்கு சென்னை ரயில் நிலையங்களில் பலத்த சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
டெங்கு காய்ச்சல் டெல்லியில் வேகமாக பரவி வருகிறது. டெங்குவினால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை அங்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
எனவே டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் விதமாக சுகாதாரத் துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் பொது சுகாதார துறை இணைந்து டெங்கு பரிசோதனை முகாமை நடத்தி வருகிறது. டெல்லியில் இருந்து சென்னை வரும் ரயில் பயணிகளுக்கு டெங்கு பாதிப்பு உள்ளதா என்று நேற்று பரிசோதனை செய்தனர்.
இது குறித்து மாநகராட்சி மண்டல நல அலுவலர் சுகன்யா தேவி கூறுகையில், ‘‘டெல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பலியாகி வருகின்றனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு டெங்கு அறிகுறி உள்ளதா என்று சோதனை நடத்தி வருகிறோம்.
டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலம் பரவுவதால் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தேங்காய் ஓடு, டயர், ஆட்டுக்கல் போன்றவற்றில் தேங்கும் நீரில் கொசு உற்பத்தியாகி டெங்கு பரவுவதால் வீட்டை சுற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.'' என்றார்.