அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சி நடக்கிறது.. எடப்பாடி பழனிச்சாமி புகார்
அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சி நடைபெற்று வருவதாகவும், அதனை முறியடிக்கத் தயார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்: தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சி நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் பழனிச்சாமி, விழுப்புரம் மாவட்டத்திற்காக, ரூ.198 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம், கடல்நீரை குடிநீராக்க ரூ.1000 கோடி மதிப்பீட்டில் திட்டம் ஆகியவற்றை அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:

குடிநீர் பிரச்சனை
தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையைப் போர்க்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்கெங்கு குடிநீர் பிரச்சனை அதிகம் இருக்கிறதோ அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை மக்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளின் மூலம் தேங்கியுள்ள நீர்நிலைகள் அகற்றப்பட்டு வருகின்றன. நன்னீரில் உருவாகும் கொசுவே டெங்குவிற்கு காரணம். எனவே, அவற்றை அகற்றத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஓபிஎஸ்ஸுக்கு உரிமை
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த அடிப்படையில் ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகக் கூறியிருக்கிறார்.

கவிழ்க்கச் சூழ்ச்சி
தமிழகத்தில் ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்குமே நன்றாகத் தெரியும். இந்தச் சூழ்ச்சியை நாங்கள் முறியடித்துக் கொண்டிருக்கிறோம்.

மக்களின் தேவை
தமிழகத்தில் அதிமுக கட்சியும், ஆட்சியும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியில் எந்தக் குறையும் இல்லை. மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து அமைச்சர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications