அழுக்குப்பிடித்த கறுப்புக்கண்ணாடிக்கு பின்னிருப்பவர்கள்.. ஓபிஎஸ் யாரை சொல்கிறார் தெரியுதா?
அழுக்குப்பிடித்த கறுப்புக்கண்ணாடிக்கு பின்னால் இருப்பவர்கள் என திமுகவை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சரமாரியாக சாடினார்.
உதகை: அழுக்குப்பிடித்த கறுப்புக்கண்ணாடிக்கு பின்னால் இருப்பவர்கள் என திமுகவை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சரமாரியாக சாடினார்.
மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா உதகையில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 29வது மாவட்டமாக உதகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சியான திமுகவை சரமாரியாக விளாசினார்.

ஓபிஎஸ் சொன்ன கதை
ஆளும் அதிமுக அரசு மீது தொடர்ந்து குறை கூறிவரும் திமுகவை சாடி கதை ஒன்றையும் கூறினார் ஓபிஎஸ். அதாவது புதிதாக திருமணமான கணவன் மனைவி ஜன்னல் வழியாக தினமும் பக்கத்து வீட்டை பார்த்துக்கொண்டிருந்தனராம்.

சரியாக துவைக்கவில்லை
அப்போது பக்கத்து வீட்டு பெண் துணிகளை துவைத்து காயப்போட்டாராம். இதனை பார்த்த அந்த பெண் தனது கணவனிடம் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு சரியாக துணி துவைக்க வில்லை என்று கூறினாராம்.

அமைதியாக கேட்ட கணவன்
நாட்கள் கடந்தன, தினமும் பக்கத்துவீட்டு துணியை பார்த்து இன்றும் அந்த பெண் அழுக்குடனே துணியை துவைத்துள்ளார் என தனது கணவரிடம் கூறிவந்தார். கணவன் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டாராம்.

நன்றாக துவைத்திருக்கிறார்
மறுநாள் காலையில் ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டை பார்த்த அந்த பெண், பளிச்சென துணிகள் காய்வதை கண்டு இன்று தான் துணிகளை அழுக்குப்போக பக்கத்து வீட்டு பெண் துவைத்துள்ளார் என்றாராம்.

கறுப்புக்கண்ணாடிக்கு பின்னால்
இதனை கேட்ட அந்த கணவன் இன்று காலையில் தான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடியை அழுக்குப் போக துடைத்தேன் என்றாராம். இந்த கதையை கூறிய ஓபிஎஸ் இப்படிதான் கறுப்புக்கண்ணாடிக்கு பின்னால் இருக்கும் பலர் அதிமுக அரசு மீது குறை கூறிவருகின்றனர் என்றார்.

கச்சத்தீவை தாரை வார்த்தவர்கள்
தங்களின் மீது உள்ள அழுக்கை துடைக்காதவர்கள் அடுத்தவர்களை குற்றம் சொல்லி வருகின்றார்கள் என்றார். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள், காவிரி பிரச்னையில் கர்நாடகாவிற்கு ஆதரவாக இருந்தவர்கள் அதிமுகவை குறைசொல்கிறார்கள் என்றும் திமுகவை சரமாரியாக விளாசினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications