கனமழை எதிரொலி.. சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை உச்சியில் சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி மற்றும் முக்கிய நாட்களில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சதுரகிரி மலையில் மழைக்காலத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதனிடையே சதுரகிரி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் சுந்தர மகாலிங்கம் கோயிலில் இருந்து தாணிப்பாறை வரை ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்படலாம் என பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பவுர்ணமி என்பதால் மலைக்கோயிலுக்கு செல்ல சதுரகிரி மலை அடிவாரத்தில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். கடந்த வருடம் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 4,000 பக்தர்களை மீட்புப் படையினர் சிரமப்பட்டு மீட்டது குறிப்பிடத்தக்கது.