உண்மையில் ஜெ.வை சந்திக்கவே இல்லையாமே சசிகலா புஷ்பா... அறைந்ததாக நாடகமாடுகிறாரா?
சென்னை: என் கட்சித் தலைவர் என்னை அறைந்தார்' என ராஜ்யசபாவில் சசிகலா பேசிய பேச்சு நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை சந்திக்காமலேயே தனது எம்.பி., பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகப் பெரிய நாடகத்தை சசிகலா புஷ்பா அரங்கேற்றி விட்டார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
திங்கட்கிழமை ராஜ்யசபாவில் விவாதம் அமைதியாக தொடங்கியது. சனிக்கிழமையன்று திருச்சி சிவா உடனான மோதலுக்குப் பின்னர் கடந்த ஞாயிற்றுக் கிழமை போயஸ் தோட்டத்தில் நடந்த விவகாரத்தைப் பற்றி ராஜ்யசபாவில் பேசத் தொடங்கினார் சசிகலா புஷ்பா.
இந்த அரசு பாதுகாப்புத் தருமா? என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. நான் பதவியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன். ஒரு கட்சியின் தலைவர் எம்பியை அறைய முடியும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். நேற்று என்னை அழைத்து என்னை அறைந்தார் என் கட்சியின் தலைவர். என் வீட்டில்கூட என்னால் பாதுகாப்பாக வாழ முடியாது.
இந்தப் பதவியைக் கொடுத்தது ஜெயலலிதா அவர்கள் தான். அதற்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது என்னை பதவி விலக கட்டாயப்படுத்துகிறார். நான் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். எனக்கு பாதுகாப்பு வேண்டும். என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினார்.
அப்போது அதிமுக எம்.பிக்கள் எழுந்து சசிகலா புஷ்பாவிற்கு எதிராக குரல் கொடுக்கவே, சசிகலா புஷ்பாவை பேச அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், தி.மு.க எம்.பி கனிமொழி ஆகியோர் கூறினர்.
ராஜ்யசபாவில் சசிகலா பேசிக் கொண்டிருந்த தகவலைக் கேள்விப்பட்ட பிறகே, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதன்பின்னரும் பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார் சசிகலா புஷ்பா. எந்த சூழ்நிலையிலும் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் தில் பேட்டி கொடுத்தார்.
டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க எம்.பியுடன் தாக்குதல் ஈடுபட்டதற்கு மிக முக்கியக் காரணமே, சிவாவுடன் தனிப்பட்ட பணம் கொடுக்கல் வாங்கல் தகராறுதான். அது தொடர்பாக சசிகலா சிவாவைத் தொடர்பு கொள்ளும்போதெல்லாம், தவிர்த்து வந்தாராம் சிவா.
இந்த ஆத்திரத்தினால்தான் விமானநிலையத்தில் சிவாவைப் பார்த்ததுமே, பணம் கேட்டுதான் அவருடைய கன்னத்தில் அறைந்தாராம். இதற்கு முன்பு சிவாவுடன் இருப்பதாக வெளியான புகைப்படங்களால் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது. அப்போதே அவரை எச்சரித்தாராம் தம்பிதுரை.
மேயர், கட்சியின் மகளிரணிச் செயலாளர், ராஜ்யசபா எம்.பி ஆகிய அனைத்து பதவிகளும் சசிகலாவுக்குக் கிடைப்பதற்கு மிக முக்கியக் காரணமே தம்பிதுரைதான். விமான நிலைய தகராறு என செய்தி வெளியானதுமே, தம்பிதுரையை அழைத்து, விசாரித்தாராம் முதல்வர் ஜெயலலிதா.
அதே நேரத்தில் அதிமுகவில் மீண்டும் பதவி பெறுவதற்காகவே டெல்லி விமான நிலையத்தில் சிவாவை தாக்கினார் சசிகலா புஷ்பா என்று பலரும் குற்றம் சாட்டினர். ஆனால் அதுவே அவருக்கு எதிராக திரும்பி விட்டது.
ஞாயிற்றுக்கிழமைகளில் முதல்வர் யாரையும் சந்திக்க மாட்டார். தவிர்க்க முடியாத சந்திப்பு என்றாலும், விரும்பினால் மட்டுமே சந்திப்பு நடக்கும். இது கட்சிக்காரர்கள் அனைவருக்கும் தெரியும். சசிகலா விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது பூங்குன்றனும் தம்பிதுரையும்தானாம்.
ஞாயிற்றுக்கிழமையன்று போயஸ் தோட்டத்திற்கு அழைக்கப்பட்ட சசிகலா புஷ்பாவை விசாரித்ததே தம்பிதுரையும் பூங்குன்றனும் மட்டும்தானாம். மேடம் ரொம்ப கோபமா இருக்காங்க. ரிசைன் லெட்டர் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க என்று சொன்னதே தம்பிதுரைதான் என்கின்றனர்.
என்னுடைய தனிப்பட்ட விவகாரம் வேறு. அரசியல் பாதை வேறு. தவறே செய்யாத நான் எதுக்கு ரிசைன் பண்ணனும்' என சசிகலா புஷ்பா பதில் சொல்லவே, தம்பிதுரையும் பதிலுக்கு பேசியதோடு, ஒரு வெற்றுத் தாளைக் கொடுத்து வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கிவிட்டனராம்.
முதல்வர் ஜெயலலிதாவை சசிகலா புஷ்பா சந்திக்காமலேயே ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியதற்காக ராஜ்யசபாவில் பேசி தேசிய அளவில் தனக்கு அனுதாபம் ஏற்படும் அளவிற்கு கண்ணீர் விட்டு பேசி அனுதாபத்தை சம்பாதித்துக் கொண்டார் சசிகலா புஷ்பா என்கின்றனர்.
திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா அடித்த செய்தி மறைந்து போய்... சசிகலா புஷ்பாவை முதல்வர் அடித்தார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது. ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து ஸ்டண்ட் அடிப்பார் என்று முதல்வர் உள்பட யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றுதான் பேசிக்கொள்கின்றனர்.