குக்கர் கூறுபோடப் போவது திமுக- காங். ஓட்டுகளைத் தான்... உளவுத்துறை அறிக்கையால் தெம்பில் பாஜக
Recommended Video
சென்னை: தினகரன் அணியினர் திமுக- காங்கிரஸ் வாக்குகளைத்தான் பிரிக்க வாய்ப்பிருக்கிறது என்று உளவுத்துறை கொடுத்த அறிக்கையால் பாஜக மேலிடம் தெம்பாக இருக்கிறதாம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியைத் தக்கவைக்கும் வகையில், மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்புப் புரட்சிப் பயணத்தை நடத்தி வருகிறார் தினகரன். இந்தப் பயணத்துக்கு முன்புபோல, பெரிதாக எந்தவித ஈர்ப்பும் தென்படவில்லை.
ஆங்காங்கே, பன்னீர்செல்வம் ஆதரவாளர்களோடு தினகரன் ஆதரவாளர்கள் மோதும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று குக்கர் சின்னம் கிடைத்த தீர்ப்பை, இனிப்பு கொடுத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தினகரன் ஆட்கள்.
நம்பிக்கையுடன் தினகரன்
' குக்கர் சின்னத்தின் மூலம், உள்ளாட்சியில் பெருவாரியான வெற்றி கிடைக்கப் போகிறது. பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளை நாங்கள் கைப்பற்றப் போகிறோம்' எனப் பேசி வருகின்றனர் தினகரன் தரப்பினர். அதேநேரம், குக்கர் சின்னம் ஏற்படுத்தப் போகும் பாதிப்புகளைப் பற்றியும், டெல்லி வட்டாரத்தில் ஆலோசனை நடந்து வருகிறது.
சிறுபான்மை ஓட்டுகள்
இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க பிரமுகர் ஒருவர், " ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றியை, 233 தொகுதிகளுக்குமான தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்து வைத்திருக்கிறோம். தினகரனுக்குச் சென்ற வாக்குகளில் பெரும்பாலானவை, சிறுபான்மையின வாக்குகள்தான். இதனால், அதிகம் பாதிக்கப்பட்டது தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிதான்.
பாஜக - அதிமுக அணிக்கு சாதகம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிக்கு 24 சதவீத வாக்குகள் கிடைத்தன. வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில், 'மும்முனைப் போட்டி நிலவ வேண்டும்' என டெல்லி தலைமை விரும்புகிறது. ' தி.மு.க, காங்கிரஸ் வாக்குகள் தினகரன் பக்கம் சென்றுவிட்டால், பா.ஜ.க-அ.தி.மு.க அணியின் வெற்றி சுலபமாகிவிடும். மாநிலம் முழுவதும் 8 முதல் 10 சதவீத வாக்குகளைத் தினகரன் பெறுவார்' என மத்திய உளவுத்துறை(ஐ.பி) அறிக்கை அளித்திருக்கிறது.
திமுக- காங் .கூட்டணியை உடைக்க முயற்சி
தனிக்கட்சி தொடங்கி குக்கர் சின்னத்தில் வாக்கு கேட்டாலும், இந்த அளவுக்கான வாக்குகள்தான் தினகரனுக்குக் கிடைக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என விவரித்தவர்," நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.க-காங்கிரஸ் அணி சேரும்போதெல்லாம் மிகப் பெரிய வெற்றியையே ஈட்டி வந்துள்ளது. கடந்த தேர்தலில், 2ஜி உள்ளிட்ட விவகாரங்களில் காங்கிரஸின் செயல்பாடுகளால் தி.மு.க முன்னணித் தலைவர்கள் கடும்கோபத்தில் இருந்தனர். காங்கிரஸ் கட்சியையும் புறக்கணித்தனர். இதன் விளைவாக, 37 தொகுதிகளில் அ.தி.மு.க வென்றது. 2 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது. 'வரக் கூடிய 2019 தேர்தலிலும் இந்தக் கூட்டணி அமையக் கூடாது' என பா.ஜ.க தலைமை எதிர்பார்க்கிறது. தி'.மு.க, காங்கிரஸ் அணிக்குச் சென்று சேரக் கூடிய வாக்குகளை தினகரன் பிரிப்பது ஒருவகையில் நல்லதுதான்' என தலைவர்கள் நினைக்கின்றனர். எனவே, மும்முனைப் போட்டி உருவாவதைத் தடுக்க முடியாது" என்றார் விரிவாக.