எடப்பாடி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.. ஹைகோர்ட்டில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு
சென்னை: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இதுபோல ஸ்டாலினும் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முறையீடு செய்துள்ளனர்.
அ.தி.மு.கவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை அடைந்ததால், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை' என்று அ.தி.மு.கவைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் கடந்த மாதம் 22ம் தேதியும், மேலும் மூன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் செப்டம்பர் 6ம் தேதியும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துத் தனித்தனியே கடிதம் கொடுத்தனர்.

ஆளுநரிடம் திமுக மனு
தி.மு.க மற்றும் அதன் தோழமைக்கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் கடந்த மாதம் 26ம் தேதி ஆளுநரிடம், தமிழக அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என்றும், சட்டசபையைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மனு கொடுத்தனர்.

குடியரசு தலைவரிடம் சந்திப்பு
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தையும் டெல்லியில் காங்கிரஸ், தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து, தமிழகத்தில் எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என்று மனுக் கொடுத்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் 10 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை கடந்த 10ம் தேதி சந்தித்து மனு கொடுத்தனர்.

ஹைகோர்ட்டில் வழக்கு
இருப்பினும் ஆளுநர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வகையில் சட்டசபையை கூட்ட உத்தரவிடவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஹைகோர்ட்டில் திமுக செப்டம்பர் 12ம் தேதி (நேற்று முன்தினம்) வழக்கு தொடர்ந்துள்ளது. அதே பாணியில், இப்போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சிக்கல்
இந்த வழக்குகளின் நோக்கம், சட்டசபையை கூட்டுமாறு, ஆளுநர் உத்தரவிட, ஹைகோர்ட் அறிவுறுத்த வேண்டும் என்பதுதான். கோர்ட் இந்த விஷயத்தில் அப்படி ஒரு முடிவை எடுத்தால் அது எடப்பாடி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications