அன்னிய செலவாணி மோசடி வழக்கு...ஆஜராகாத டிடிவி தினகரன் - மார்ச் 27ல் தீர்ப்பு
அன்னியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கோரி டிடிவி தினகரன் மனு மீதான தீர்ப்பு மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் இன்று டி.டி.வி.தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையை ஒத்திவைக்க டிடிவி.தினகரன் கோரிய வழக்கில் தீர்ப்பு 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக அம்மா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மீது அன்னியச் செலாவணி மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.
1996ஆம் ஆண்டு, ஜெ.ஜெ. டிவிக்கு அப்லிங்க் சாதனங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக, டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர்.
இது தொடர்பாக, டி.டி.வி.தினகரன் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் இரண்டு வழக்குகளில் இருந்து டி.டி.வி.தினகரனை நீதிமன்றம் விடுவித்தது. மேலும், ஐந்து வழக்குகள் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இது தொடர்பான வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேர்தல் பணியின் காரணமாக வழக்கை இன்னொரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கு, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, இருதரப்பினரும் பிற்பகலில் தங்களது வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து பிற்பகலில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதனிடையே இடைத்தேர்தல் முடியும் வரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்ததை அடுத்து மார்ச் 27ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. தீர்ப்பை ஒத்திவைத்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிபதி மலர்மதி உத்தரவு பிறப்பித்தார்.