ஓ மை காட்... இப்படி கை விட்டுட்டீங்களே... திகிலடித்திருக்கும் டிடிவி தினகரன்
மூக்குப்பொடி சித்தர் உட்பட எல்லாரையும் கும்பிட்டும் எந்த சாமியும், கை கொடுக்கலையே என்று குழம்பி போயிருக்கிறாராம் டிடிவி தினகரன்.
Recommended Video

சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகளின் கிடுக்கிப் பிடியால் திகிலடித்துப் போயிருக்கிறார்கள். கும்பிட்ட சாமி எல்லாம் இப்படி கை விட்டு விட்டதே என்று குழம்பி போயிருக்கிறாராம் டிடிவி தினகரன்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, கட்சி ஆட்சியை வசப்படுத்த சசிகலா திட்டம் போட்டார். சசிகலாவின் மொத்த குடும்பமும் அதிகாரத்திற்கு வர ஆசைப்பட்டது. ஆனால் டிடிவி தினகரன் அதற்கு கடிவாளம் போட்டார்.
முதல்வர் கனவோடு இருந்த சசிகலாவிற்கு முன்வினை பயன், சொத்துக்குவிப்பு வழக்கு ரூபத்தில் வந்தது. சசிகலா சிறைக்கு போக நேர்ந்தது. கட்சி, ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைத்தார் தினகரன். ஆனால் அவர் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைதாகி சிறை சென்றார். கட்சியும், ஆட்சியும் கை விட்டு போனது.

பிரத்தியங்கிரா தேவி
திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்த டிடிவி தினகரன், சில நாட்களிலேயே பிரத்தியங்கிரா தேவி கோவிலுக்கு சென்று மிளகாய் யாகம் நடத்தினார். இதன் மூலம் எதிரிகளை அழிக்க முடியும் என்று நம்பினார்.

சாமி தரிசனம்
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரையில் புகழ்பெற்ற வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது. அங்கு கடந்த ஜூன் மாதம் சென்றார். சந்திரமவுலீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அரை மணிநேரம் தியானம்
பின்னர் வக்ரகாளியம்மன் சன்னதிக்கு சென்றார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் மூலஸ்தானம் அருகே அமர்ந்து 30 நிமிடம் மவுனமாக இருந்து தியானம் செய்தார்.

திருவண்ணாமலை சித்தர்
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார் தினகரன். ஆனால் அவரை முதல்வரோ,அமைச்சர்களோ யாரும் சட்டை செய்யவில்லை. இந்தநிலையில்தான் திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சுவாமிகள் ஆசிரமத்திற்கு சென்றார்.

தியானம் செய்த தினகரன்
சித்தர் ஆசிரமத்தில் அவர் முன்பாக சில நிமிடங்கள் தியானம் செய்தார் தினகரன். மூக்குப்பொடி சுவாமிகளிடம் ஆசி கேட்டார். ஆனால் அப்போது சித்தர் ஆசி தரவில்லையாம்.

மதுரை மீனாட்சி
ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற தினகரன், அங்கு அம்மனை வணங்கினார். தொல்லை நீங்க மீனாட்சி அம்மனை வேண்டிக்கொண்டார்.

சத்ருசம்ஹார யாகம்
அதே நாளில் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை கோவிலுக்கு சென்றார். அங்குள்ள தேனம்மை உடனுறை மங்கைபாகர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற தினகரன் அங்குள்ள வடுகபைரவருக்கு சத்ருசம்ஹார யாகம் செய்தார். தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு யாகம் செய்தால் எதிரிகள் தொல்லை ஒழியுமாம்.

ஆசி கேட்ட தினகரன்
பச்சை உடையணிந்து காணப்படும் மூக்குப்பொடி சித்தர் பெரும்பாலும் மெளனமாகவே இருப்பார். இவர் யாரையாவது நிமிர்ந்து பார்த்தால் அல்லது ஏதாவது பேசினால் அவர்களுக்கு அதுதான் அருளாசி. அந்த ஒரு வார்த்தைக்காகவே பல மணி நேரம் காத்திருப்பார்களாம் பக்தர்கள். முதல்முறை ஆசி கிடைக்காமல் போனதால் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் சித்தரிடம் ஆசி வாங்க சென்றார் தினகரன். அப்போது ஆசி கிடைத்ததா இல்லையா என்பது அவருக்கே வெளிச்சம்

கைவிட்ட சாமிகள்
வருமான வரி சோதனை நடைபெறும் இந்த சூழ்நிலை நிலையிலும் கூட கோ பூஜை, திருவண்ணாமலை பயணம், சாமி தரிசனம் என்று கோவில் கோவிலாக சென்றாலும் எந்த சாமியும் கை கொடுக்கவில்லை என்பதுதான் சோகம். எத்தனை சாமியை கும்பிட்டும் எந்த சாமியும் கை கொடுக்கலையே என்று குழம்பித்தான் போயிருக்கிறாராம் டிடிவி தினகரன்.












Click it and Unblock the Notifications