ஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை ஒழிப்பேன்.. தற்கொலைக்கு முன்பு மாணவனின் ஆவேசக் கடிதம்!
தந்தை மதுஅருந்தியதால் மனம் உடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டான்.
Recommended Video
நெல்லை: இறந்த பின்பும் ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன் என்று 12-ம் வகுப்பு மாணவன் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரின் இதயத்தையும் உலுக்கி போட்டுள்ளது.
சங்கரன்கோவிலை அடுத்த குருக்கள்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி. குடிப்பழக்கத்திற்கு அடிமையானதுடன், தினமும் வீட்டில் தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அவரது மகன் தினேஷ் நல்லசிவனையும் படிக்க விடாமல் நாள்தோறும் தொல்லை கொடுத்து வந்துள்ளார், மனமுடைந்த தினேஷ், வண்ணார்பேட்டை தெற்கு புறவழி சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
போலீசார் விரைந்து வந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அங்கிருந்த தினேஷின் பையை சோதனையிட்டனர். அதில் நீட் தேர்வு எழுதுவதற்கான அடையாள அட்டை, அனுமதி சீட்டு மற்றும் ஒரு உருக்கமான கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டது. அந்த கடிதத்தில், தான் இறந்த பிறகாவது தன் தந்தை குடிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் தனது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் தனது இறப்பிற்கு பிறாகாவது பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மதுபானக்கடைகளை அடைக்கவேண்டும் என்றும், இல்லையென்றால், தான் ஆவியாக வந்து மதுபானக்கடைகளை உடைத்து அழிப்பேன் என்றும் தினேஷ் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
குடிகார அப்பாக்களுக்கு சாட்டையடி
மது அருந்தினால் ஒரு குடும்பம் எந்த கதி ஆளாக நேரிடும் என்பதற்கும், படிக்கும் மாணவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கும் இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. பிரதமர், முதலமைச்சர் என தொடங்கி மது அருந்தும் ஒவ்வொரு குடிகார அப்பாக்களுக்கும் இது ஒரு சாட்டையடி.
15 வயது மாணவன் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால் தற்கொலை வரை சென்றிருப்பான் என்பதை யோசித்து பார்க்க வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் பண வெறிக்கு எத்தனை உயிர்கள் காவு வாங்கப்படுமோ தெரியவில்லை. இப்படியே ஒவ்வொரு குடும்பத்திலும் அரசாங்கமும் பெற்றோர்களும் செய்யும் தவறுகளுக்கு தற்கொலை செய்ய ஆரம்பித்தால் நாடு தாங்காது.
கூடும் வயிற்றெரிச்சல்கள்
டாஸ்மாக் கடைகளுக்கும் அவைகளை நடத்தும் அரசாங்கத்திற்கும் பொதுமக்களின் சாபங்களும் வயிற்றெரிச்சல்களும் கூடிக்கொண்டே போகின்றன. தினேஷின் மரணத்திற்கு பிறகாவது, அரசாங்கம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். மதுக்கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். மது பானம் தீமை குறித்து பிரச்சாரங்கள், விழிப்புணர்வு நிகழச்சிகளை நடத்த தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் முன்வரவேண்டும்.
பிள்ளைகள்தானே எல்லாம்
நீட் தேர்வுக்கு தயார் செய்து வரும் மாணவர்களே அதிக தற்கொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வு என்ற படிப்பு முறையே அவர்களை இறுக்கி நெறுக்கி தள்ளுகிறது. இதில் குடும்ப சூழ்நிலையும் சேர்ந்துகொண்டால் மாணவனின் மனநிலை, உடல்நலம் எப்படிப்பட்டதாக மாறும் என்பதை பெற்றோர்கள் நினைத்து பார்க்க வேண்டாமா? பெற்ற பிள்ளைகளைவிட அப்படியென்ன மது முக்கியமா? பிள்ளைகள்தானே உங்கள் சொத்தும்-சுகமும். அவர்களை இழந்துவிட்டு வாழ்க்கையில் குடிகார அப்பாக்கள் என்ன சாதித்து விடப்போகிறீர்கள்? மாணவர்களே, அரசாங்கத்தை திருத்த நினைக்க ஆரம்பித்தால் யாருமே உயிரோடு இருக்க முடியாது. மதுஅருந்தி தொல்லை தரும் உங்கள் குடும்பத்தாரை அன்பினால் மாற்ற முயற்சியுங்கள். ஒருவரை திருத்த ஆயிரம் வழி உண்டு. தன்னம்பிக்கை, உழைப்பு. பொறுமை, உறுதி கொண்டு எதை செய்தாலும் அதில் வெற்றியடைவீர்கள் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
தலைசிறந்த பிள்ளை தினேஷ்
தினேஷ் என்ற மாணவன் உண்மையிலேயே நல்ல மனம் படைத்தவனாக இருந்திருக்கிறான். கேடுகெட்ட குடிகார மாடசாமிக்கு இப்படி ஒரு நல்ல மனம் படைத்த மகனா என ஆச்சரியமாக உள்ளது. தினேஷ்-க்கு குடும்பத்தின்மேல் எவ்வளவு பாசம்? தந்தையின்மேல் என்ன அக்கறை? அம்மாவின் ஆன்மா மேல் எவ்வளவு மரியாதை? நீட் தேர்வுக்கு தயாராகும் அளவுக்கு படிக்கக்கூடிய புத்திசாலியாக இருந்திருக்கிறான். எல்லாவற்றிற்கும் மேலாக மதுக்கடைகளுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து வரும் இந்த நாட்டின் மீதும் நாட்டு தலைவர்களின் மீதும் என்ன ஒரு ஆதங்கம்... ஆத்திரம்? தினேஷ் தற்கொலை செய்யாமல் இருந்திருந்தால் இந்த சமுதாயத்திற்கு ஒரு தலைசிறந்த மருத்துவர் உருவாயிருப்பார். அதை கெடுத்து குட்டிசுவராக்கிவிட்டது இந்த நாடும்-அவரது வீடும். தினேஷ் உயிரோடு இருந்திருக்க கூடாதா? என மனம் ஆறாமல் துடித்துக் கொண்டே இருக்கிறது.