ஜெயலலிதாவை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற டிடிவி தினகரன்
2016ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே. நகரில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் டிடிவி தினகரன்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இது 2016ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே. நகரில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாகும்.
தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஆளுங்கட்சியை ஒரு சுயேட்சை வேட்பாளர் வீழ்த்தி சரித்திர சாதனை படைத்துள்ளார்.

டிடிவி தினகரன் 50.32 சதவிகித வாக்குகளைப் பெற்றார். அதிமுகவின் மதுசூதனன் 27.31% வாக்குகளையும் பெற்றார். 13.9% வாக்குகளை மட்டுமே பெற்றார் திமுகவின் மருதுகணேஷ்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா, முதல் சுற்றில் திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை விட 1806 வாக்குகள்தான் ஜெயலலிதா முன்னிலையில் இருந்தார். பின்னர், 19வது சுற்றில் 97 ஆயிரத்து 218 வாக்குகள் பெற்ற ஜெயலலிதா 39 ஆயிரத்து 545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சிம்லா முத்து சோழன் 57 ஆயிரத்து 673 வாக்குகள் பெற்றார்.
2015ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடந்த இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி, எதிர்கட்சியை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்கிய டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றுள்ளார். 89013 வாக்குகள் பெற்றுள்ளார் தினகரன். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட 1162 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகளும், நான்காவது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 3,802வாக்குகள் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications