ராஜீவ் கொலை..7 தமிழரின் விடுதலைக்காக கோட்டையை நோக்கிய பேரணியில் பங்கேற்க இயக்குனர் ராம் அழைப்பு
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 தமிழரின் விடுதலைக்காக வேலூரில் இருந்து சென்னை கோட்டையை நோக்கிய பேரணியில் பங்கேற்க இயக்குனர் ராம் அழைப்பு விடுத்துள்ளார்.
பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுதலை செய்யக்கோரி 11ம் தேதி வேலூரில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட உள்ளது. இதில் பெரும் திரளானோர் கலந்து கொள்ளவுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டது. தற்போது மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் எனப் பலரும் பேரணிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக கோட்டையை நோக்கிய பேரணியில் பங்கேற்க இயக்குனர் ராம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் அந்த கொலைக்கு சம்பந்தமில்லாத பேரறிவாளன் உள்ளிட்டோர் தண்டிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயமாகும்.
பேரறிவாளனை விசாரணை செய்த அதிகாரியே அவர் குற்றவாளி அல்ல என நீண்ட காலத்திற்கு பின்னர் கூறியிருக்கிறார். ஆனாலும் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படாமல் சிறையிலேயே இருக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என அற்புதம் அம்மாள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தன்னுடைய மகன் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஜனநாயக முறையில் பல போராட்டங்களை நடத்தி வருகிறார் அற்புதம் அம்மாள். மகனுடைய விடுதலைக்காகவும் மற்றவர்களின் விடுதலைக்காகவும் போராடி வரும் அற்புதம் அம்மாளுக்காகவும், பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுதலை செய்யக்கோரி நடைபெறவுள்ள மோட்டார் சைக்கிள் பேரணியில் நாம் நம்முடைய வாழ்க்கையில் இருந்து ஒரு நாளை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ராம் கூறினார்.
முன்னதாக நடிகர் சத்யராஜ், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.