தொகுதி மக்களை சந்திக்காத எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யலாம்: ஸ்டாலின்
கிருஷ்ணகிரி: எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை தங்களது தொகுதி மக்களை சந்திக்காவிட்டால், அவர்களை தகுதி நீக்கம் செய்து விட்டு அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.
நமக்கு நாமே என்ற விடியல் மீட்பு பயணத்தை குமரியில் ஆரம்பித்த மு.க.ஸ்டாலின் மூன்றாம் கட்டமாக தற்போது சேலத்தில் தொடங்கி திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, என சுற்றிவந்து வேலூரில் மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
மக்களிடம் குறைகேட்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டையை அடுத்த பென்னங்கூரிலிருந்து பயணம் செய்த ஸ்டாலின், பல்வேறு கிராமங்களுக்கு சென்றார். அங்கு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்கிருந்து புறப்பட்டு தளி பகுதிக்கு சென்றவர், அங்கு தெலுங்கு, கன்னட மக்களை சந்தித்தார்.
தமிழ் வழிக்கல்வி
தி.மு.க ஆட்சியில்தான் கட்டாய தமிழ் வழிக்கல்வியை கொண்டு வந்தீர்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் மொழி சிறுபான்மையினர் அதிகமாக இருக்கிறோம். தமிழ்வழிக்கல்வியால் எங்கள் பிள்ளைகள் பள்ளிப்படிப்பைக்கூட தாண்டமுடியாமல் தவிக்கிறார்கள். மொழி சிறுபான்மையினராக இருக்கும் எங்களுக்கு எங்கள் தாய்மொழியிலேயே கல்வி கற்க அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கைவிடுத்தனர். அதை கேட்டுக்கொண்ட ஸ்டாலின், தி.மு.க ஆட்சி அமைத்ததும் அது நிறைவேற்றப்படும் என்றார்.
ஓசூரில் சந்திப்பு
ஓசூர் யசோதா மஹாலில், தொழிலாளர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், " நமக்கு நாமே பயணம் குறித்து சிலர் கேலி செய்கின்றனர். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. அவர்கள் அப்படி கேலி கிண்டல் செய்வதால் எனக்கு உற்சாகமும், ஊக்கமும் அதிகமாகியுள்ளதே தவிர சோர்ந்து போய் விடவில்லை.
மக்களை தேடி செல்வோம்
பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்த எனக்கு ஒன்றுமட்டும் புரிந்து விட்டது. அரசியல்வாதிகளை தேடி மக்கள் செல்லக் கூடாது. மக்களை தேடித்தான் அரசியல்வாதிகள் செல்லவேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை தனது தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்காத எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், கவுன்சிலர்கள் ஆகியோரை தகுதி நீக்கம் செய்யும் சட்டத்தை கொண்டு வருவது தப்பில்லை.
இடைத்தேர்தல் நடத்தலாம்
இதற்கான சட்டத்தை மத்திய அரசு ஆதரவுடன்தான் கொண்டு வரமுடியும். தி.மு.க.,வினர், 15 நாட்களுக்கு ஒருமுறை தங்களது தொகுதி மக்களை சந்திக்காவிட்டால், இடைத்தேர்தல் நடத்தலாம் என்ற நடைமுறையை கொண்டு வர முயற்சி செய்வோம் என்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
வேலூரில் பயணம்
கிருஷ்ணகிரி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று வேலூர் மாவட்டத்தில் நமக்கு நாமே பயணத்தைத் தொடங்கினார் ஸ்டாலின். ஜோலார்பேட்டையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுடன் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். திமுக ஆட்சியில் சுயஉதவிக் குழுக்களை கவனித்துக் கொள்ள தமக்கு உத்தரவிடப்பட்டதாகவும், மேலும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நலத் திட்ட உதவிகள் நேரிடையாக வழங்கப்பட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாக்குறுதி நிறைவேற்றாத ஜெ.,
25 சதவீதம் மானியத்தோடு ரூ. 10 லட்சம் கடன் தருவதாக மகளிருக்கு ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தேர்தலில் ஜெயலலிதா தந்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்பது உங்களுக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
முதியோர் உதவித்தொகை
திமுக ஆட்சியில் எல்லா நாட்களிலும் ரேஷன் கடைகளில் எல்லா பொருளும் கிடைக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதியோர் உதவித் தொகையினை 60 சதவீதம் பேருக்கு ஜெயலலிதா நிறுத்திவிட்டார்.
மக்களை சந்திப்பேன்
திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் மக்களை சந்தித்து குறைகளை கேட்பேன் என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். முதல்வர், அமைச்சர், எம்.பி.யாரும் உங்களை சந்தித்து குறைகளை கேட்காதது ஏன் என்றும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.